World

தவளை ஏற்றுமதியால் பாம்புகள் கடும் சீற்றம்!

தவளைகளை பெரிய அளவில் சட்ட விரோதமாக வேட்டையாட்டி சீனாவுக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளினால் தனது உணவான தவளைகளை இழந்த பாம்புகள் ஆந்திர மாநிலம் திவிசீமா கடற்கரைத் தீவுப்பகுதியில் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் புகுந்து போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன.

1977-ம் ஆண்டு வீசிய கடும் புயலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு திவிசீமா தேசியக் கவனம் பெற்றது. இதில் 10,000 பேர் மடிந்தனர். இப்போது 40 ஆண்டுகள் சென்று மீண்டும் திவிசீமா செய்தியில் அடிபடுவது அதன் தவளை சட்ட விரோத ஏற்றுமதி மற்றும் பாம்புகளின் சீற்றத்திற்காக என்றால் மிகையாகாது.

கிருஷ்ணாநதி மற்றும் வங்காளவிரிகுடா அருகே உள்ளமைந்துள்ள தீவு போன்ற சதுப்புநிலப் பகுதியாகும் திவிசீமா. இங்கு கிருஷ்ணா வன உயிரிகள் சரணாலயம் என்ற அரிதான சூழலியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடம் உள்ளது. இங்கு அலையாத்தி மரங்கள் அடர்த்தியாகக் காட்சியளிக்கும். சுமார் 708.80 சதுர கிமீ பரப்பளவு கொண்ட திவிசீமா 3 மண்டலங்கள் கொண்டது. கோடுரு, அவனிகத்தா, நாகாயலங்கா. இதில் 2011 மக்கள் தொகை கணக்கெடுபின் படி 1.34 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இதில் கிருஷ்ணா வன் உயிரிகள் சரணாலாயம் 194.8 சதுர கிமீ பரப்பளவு கொண்டது.

இங்கு சமீபத்தில் 17 உறுப்பினர்கள் கொண்ட பூசாரிகள், வைதீகர்கள் 4 மணி நேர ‘சர்ப்ப சாந்தி யாகம்’ மேற்கொண்டனர். இங்குள்ள சுப்பிரமணியர் கோவிலில் இந்த யாகம் நடத்தி பாம்புகளின் சீற்றத்துக்கு சாந்தி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இங்கு பாம்புக்கடிகளால் இறப்பவர்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஆந்திர அரசே உள்ளூர் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப சர்ப்ப சாந்தி யாகத்துக்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

பாம்புகளின் உணவான தவளைகள் எண்ணிக்கை சட்டவிரோத சீன ஏற்றுமதியில் காணாமல் போக பாம்புகள் வேளாண் நிலங்களிலும் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்கும் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

உள்ளூர்வாசிகள்தான் தவளைகளை வேட்டையாடி அவற்றை சீனாவுக்கு சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்து வருகின்றனர், இதனால் உணவுச்சங்கிலி அறுந்த்ததால் பாம்புகள் உணவுக்காக படையெடுக்கத் தொடங்கியுள்ளன.

இப்போது பாம்புகள் படையெடுக்கத் தொடங்கியதால் உள்ளூர்வாசிகள் பாம்புகளையும் வேட்டையாடத் தொடங்கியுள்ளனர். தவளைகளை சட்ட விரோதமாக ஏற்றுமதி செய்வதால் தவளைகள் இனமே அங்கு இல்லாமல் போய் விடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தவளைகளுக்கு உள்ளூர் வியாபாரிகள் கவர்ச்சிகரமான விலைகளை கொடுத்ததால் தவளைகள் வேட்டை அதிகரித்தது, தவளைகளின் இரண்டு கால்கள், தலையை வெட்டி எடுத்து விட்டு ஐஸ் பெட்டிகளில் பேக் செய்து சீனாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. “தவளைக் கால்கள் கொல்கத்தாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சீனாவுக்குச் செல்வதாக” தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து சதுப்பு நிலக்காடுகள் நிபுணர் அல்லப்பார்த்தி அப்பாராவ் கூறும்போது, “கடந்த 10 ஆண்டுகளாக தவளை வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது” என்கிறார்.

பாம்புக்கடி அதிகரிப்பு:

கிருஷ்ணா நதியிலிருந்து மனித வசிப்பிடங்களுக்குள் பருவ மழை காலக்கட்டத்தில் வெள்ள நீர் நுழையும் போது சதுப்புநிலங்களிலிருந்தும் அடர்ந்த அலையாத்தி காடுகளிலிருந்தும் பாம்புகள் மனித இடங்கள் நோக்கி படையெடுக்கின்றன.

இப்பகுதிகளில் கருநாகம், கட்டுவிரியன், கோதுமைநிறப்பாம்பு, பச்சைப்பாம்புகள் என்று பாம்புகள் வகைவகையாக இங்கு உள்ளன, கடுமையான விஷம் கொண்ட பாம்புகளும் அதிகம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 320 பாம்புக்கடி கேஸ்கள் ரிப்போர்ட் செய்யப்பட்டன. பாம்புக்கடிக்கு எதிரான மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் போதிய அளவில் இருப்பதால் மரணங்கள் ஓரளவுக்குத் தடுக்கப்படுகின்றன.

இருந்தாலும் திவிசீமா மக்கள் பீதியில்தான் வாழ வேண்டியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading