மாணவர்களை துரத்தி துரத்தி கொட்டியன குளவிகள் ! பதுளையில் 70 பேர் வைத்தியசாலையில்!
பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில், குளவிக் கூடொன்று கலைந்து மாணவர்களை கொற்றத் தொடங்கியதால் 70 பேர், தெமோதரை,
பண்டாரவளை, பதுளை ஆகிய இடங்களிலுள்ள வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளக்கட்டுவை சுகதா கனிஸ்ட வித்தியாலய மைதானத்தில் இன்று (17) இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.
இப்போட்டியின் போதே, மைதான அருகேயுள்ள மரத்திலிருந்து குளவிக்கூடு கலைந்து, போட்டியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளையும், பார்வையாள மாணவ, மாணவிகளையும் கொற்றத் தொடங்கின.
இவர்கள் உடனடியாக, அப் பகுதியிலுள்ள வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகளுக்கு ஏற்றிச் செல்லப்பட்டனர். அதையடுத்து, இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பதுளை அரசினர் மருத்துவமனையில் 16 மாணவ, மாணவிகளும், பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் 30 மாணவ, மாணவிகளும், தெமோதரை அரசினர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகளுமாக 70 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எல்ல பொலிசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பதுளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 16 மாணவ மாணவிகளில் 3 பேர் ஆபத்தான நிலையிலுள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எம். செல்வராஜா (பதுளை நிருபர்)
