Features

பிரசவ வலிக்கு முன் ஏற்படும் வலிகள்… கவனம் செலுத்த வற்புறுத்தும் மருத்துவ ஆய்வாளர்

பொதுவாக பெண்களுக்கு பிரசவம் மற்றும் அதற்கு முன் ஏற்படும் வலி குறித்து மட்டுமே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.

ஆனால், அதற்கு முன், குறிப்பாக third trimester of pregnancy என்னும் 27ஆவது வாரம், அல்லது அதற்கு முன் ஏற்படும் வலியைக் குறித்து பெரும்பாலானோர் அதிக அக்கறை காட்டுவதில்லை.

அதுவும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள், அந்த வலியைக் குறித்து வெளியே அதிகம் பேசுவது கூட இல்லை.

நேற்றுவரை ஒரு இளம்பெண்ணாக உற்சாகத்துடன் நடைபோட்ட ஒரு பெண், திடீரென வயிற்றுக்குள் ஒரு உயிரை சுமந்துகொண்டு நடமாடுவது ஒன்றும் எளிதல்ல.

அது அவளுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒரு வித்தியாசமான அனுபவம். தாயாகப்போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், அவள் சுமார் 280 நாட்கள் ஒரு குழந்தையை தன் வயிற்றுக்குள் சுமந்தாகவேண்டுமே.

ஆக, இந்த கர்ப்பகாலத்தில் மூன்றாவது trimesterஇல் பல பெண்கள் தங்கள் உடலில் வலியை அனுபவிக்கிறார்கள்.

பிரசவ வலிக்கு முன் ஏற்படும் வலிகள்... கவனம் செலுத்த வற்புறுத்தும் மருத்துவ ஆய்வாளர் | Pregnant Pain Pregnancy Symptoms TylenolAlamy/PA

முதலில் ஹார்மோன் மாறுபாடுகளால் ஏற்படும் வலி, அடுத்து இடுப்பு மூட்டுக்கள் நெகிழ்வதால் ஏற்படும் வலி, அத்துடன் சேர்ந்து குழந்தையின் எடை வயிற்றை முன்னோக்கி இழுப்பதால் ஏற்படும் வலி, வயிறு முன்னோக்கி இழுக்கப்படுவதால் முதுகெலும்பு அசாதாரணமாக வளைய, அதனால் ஏற்படும் வலி என இத்தனை வலிகளையும் சந்திக்கிறாள் கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்.

பொதுவாக இடுப்பு வலி முதுகுவலி ஏற்படும்போது அதிகபட்சம் ஒரு பாராசிட்டமால் மத்திரையை எடுத்துக்கொள்கிறார்கள் சிலர். ஆனால், ஒருவேளை மாத்திரை பிள்ளையை பாதித்துவிடுமோ என வலியைப் பொருத்துக்கொண்டு அதையும் தவிர்க்கும் பெண்களும் உண்டு.

பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதற்கு மாற்றாக, சூடு அல்லது குளிர் ஒத்தடம், மசாஜ், chiropractic என்னும் முறை சிகிச்சைகள், பிசியோதெரபி போன்ற சிகிச்சைகளும் உதவக்கூடும்.

வேலை செய்யும் பெண்களைப் பொருத்தவரை தங்களுக்கு முதுகு அல்லது இடுப்பு வலி வருவதாகக் கூறினால், அதிகபட்சம் அவர்களை விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லுங்கள் என அலுவலகங்கள் கூறக்கூடும்.

ஆனால், அதிலும் பிரச்சினை உள்ளது. ஒன்று, இப்போதே விடுப்பு எடுத்தால், பிரசவ விடுப்பு குறைந்துவிடுமே, பிரசவத்துக்குப் பிறகு பிள்ளையுடன் செலவிடும் நாட்கள் குறைந்துவிடுமே என்ற கவலை பெண்களுக்கு ஏற்படுகிறது.

அடுத்ததாக, இப்படி கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலிக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்வதால், அது மனோரீதியாகவும் பெண்களை பாதிக்கலாம் என்கிறார் Julie Vignato என்னும் துறைசார் ஆய்வாளர்.

வீட்டில் போய் உட்கார்ந்துகொள்வதால் வலி குறையப்போவதில்லை. அத்துடன், வீட்டுக்குப் போனாலும் சும்மா உட்கார முடியாது. பிள்ளைகளை கவனித்துகொள்ள நேரலாம். அன்றாட வேலைகளையும் தவிர்க்க முடியாது.

த்துடன், இப்படி கர்ப்ப கால வலிக்காக விடுப்பு எடுக்கும்போது, தன்னால் அலுவலக வேலையைச் செய்யமுடியவில்லையே என்னும் ஆதங்கமும் மேலோங்க, பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள்.

விடயம் என்னவென்றால், மேலை நாடுகளில் பாராசிட்டமால் தவிர்த்து வேறு சிகிச்சைகள் உள்ளன. ஆனால், நம் நாட்டில் அவை இல்லை. அத்துடன், கர்ப்ப கால மன அழுத்தத்தை பல குடும்பங்கள் சரியாக கவனிப்பதில்லை.

இந்நிலையில், பிரசவ வலி அல்லாமல், அதற்கு முன் கர்ப்ப காலத்தில் ஏற்படும் வலியை கவனித்தே ஆகவேண்டும் என்கிறார் Julie Vignato.

உங்கள் வலி குறித்து உங்கள் வீட்டில் ஒருவரிடம் சொல்லி அவர் கவனிக்கவில்லை என்றால் இன்னொருவரிடம் சொல்லுங்கள். உங்கள் மருத்துவர் உங்கள் வலிக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையென்றால், வலிக்காக மற்றொரு மருத்துவரை நாடுங்கள், அது அவசியம் என்கிறார் அவர்.

கர்ப்ப காலத்தில் இதெல்லாம் சகஜம் என்று விடாமல், அந்த வலி குறித்து கவனம் செலுத்துவதும், அதைக் குறைப்பதற்காக சரியான சிகிச்சை பெறுவதும் நிச்சயம் அவசியம்.

ஆக, இந்த கர்ப்ப கால வலிக்கு ஒரு தீர்வு கிடைக்குமானால், அது பெண்ணின் உடல் நலனுக்கும் மன நலனுக்கும் நன்மை பயக்கும். ஒரு வீட்டில் பெண் மகிழ்ச்சியாக இருந்தால் அந்த வீடே நன்றாக இருக்கும் என்பதை மறுக்கமுடியுமா!

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading