ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் தற்கொலை குண்டு தாக்குதல் திட்டம்! வெளியானது திடுக்கிடும் தகவல்!!
ஈஸ்டர் திருநாளன்று பதுளையிலும் இரண்டு தேவாலயங்கள்மீது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக பதுளை பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதற்காக பதுளை வந்ததாக சந்தேகிக்கப்படும் இருவர் பதுளையின் இரு தேவாலயங்களுக்கு சென்றிருப்பதான தகவல்கள், தேவாலய சி.சி.டி.வி. கெமராக்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.

மேற்படி இருவரில் ஒருவர் உடைப் பையைப் போன்ற பையை முதுகில் சுமந்தவாறு செல்ல, மற்றவர் தம்மை எவராவது கவனிக்கின்றனரா? என்று அறியும் வகையில் சி.சி.டி.வி. கெமராவின் காட்சி இருந்து வருகின்றது.
இவர்கள் இருவரும் இளைஞர்களாக இருக்கும் அதே வேளை, முதல் சென்ற தேவாலயத்தில் 21-04-2019ல் நற்கருணை ஆராதனை முடிந்ததினால், மற்ற தேவாலயத்திற்கு சென்றுள்ளதும், ஆராதனை நேர மாற்றத்தினால், இவ் இரு இளைஞர்களது இலக்கு நிறைவேறவில்லையென்பதும் தெரியவந்துள்ளது.
இது குறித்து ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் ஜகத் பலியக்கார, பதுளை பொலிஸ் அதிபர் சுதத் மாசிங்க ஆகியோர் தலைமைகளில், மேற்படி சம்பவம் குறித்து தீவிர புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எம். செல்வராஜா
