FACETS Sri Lanka 2027: ஒரு பிரகாசமான பாரம்பரியத்தின் 34வது பதிப்பு
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 34வது FACETS Sri Lanka கண்காட்சி, 2027 ஜனவரி 4 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை கொழும்பில் உள்ள உலகப் புகழ்பெற்ற Cinnamon Life at City of Dreamsஇல் நடைபெறவுள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், நாட்டின் மிகச்சிறந்த இரத்தினக்கல் மற்றும் ஆபரண நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கையின் இணையற்ற கைவினைத்திறன் மற்றும் இரத்தினக்கற்களின் சிறப்பை நேரில் கண்டறிய அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, சீனா, தாய்லாந்து மற்றும் ஏனைய முக்கிய சந்தைகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் கொழும்பில் ஒன்றுகூடவுள்ளனர்.
இந்த 34வது கண்காட்சி குறித்து அறிவிப்பதற்கான ஊடகவியலாளர் சந்திப்பில், பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்காளிகள் பலரும் கலந்துகொண்டனர். அங்கு வருகை தந்திருந்த பல முக்கிய பிரமுகர்கள், இந்த கண்காட்சியின் முக்கியத்துவம் மற்றும் இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் தொடர்ச்சியான வளர்ச்சி குறித்த தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். இவர்களில், தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் (NGJA) தலைவர் பேராசிரியர் எஸ். பி. சாமிந்த, ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையின் (EDB) தலைவர் மங்கள விஜேசிங்க மற்றும் Cinnamon Life at City of Dreams ஹோட்டலின் முகாமையாளர் ரொஷான் ஜோர்ஜ் ஆகியோர் அடங்குவர். இவர்கள் அனைவரும் இலங்கையின் முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சிக்கு தங்களது நிறுவனங்கள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்ற உறுதியை மீளவும் வெளிப்படுத்தினர்.
FACETS Sri Lanka இந்த 34வது பதிப்பில், இலங்கையின் உலகப் புகழ்பெற்ற நீல இரத்தினக்கற்கள் (Sapphires) மற்றும் சமகால நவீன ஆடம்பர ஆபரணங்களை (Luxury Jewellery) காட்சிப்படுத்துவதற்காக தனித்துவமான பிரிவுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளை, Sapphire Night, Story Corner, Power Breakfast, Mine Tour மற்றும் Port City Tour உள்ளிட்ட பல சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை புதிய தொடர்புகளை ஏற்படுத்துவதற்கும், அறிவுப் பகிர்வு மற்றும் கூட்டு முயற்சிகளுக்குமான சிறந்த வாய்ப்புகளை உருவாக்கும்.
FACETS Sri Lanka கண்காட்சியின் தொடர்ச்சியான வெற்றிக்கு, இலங்கை ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை (EDB) மற்றும் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை (NGJA) ஆகியவற்றின் ஒத்துழைப்பு பெரும் பலமாக அமைந்துவருகிறது. இக்கண்காட்சியின் நீண்டகால பங்காளிகளான EDB, இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை சர்வதேச வர்த்தகர்கள் மற்றும் சந்தைகளுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதேவேளை, இத்துறைக்கான தரநிலைகளைப் பேணவும், அதன் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் NGJA உழைத்து வருகிறது. இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்துடன் (SLGJA) இணைந்து, இந்த நிறுவனங்கள் FACETS கண்காட்சியை நாட்டின் முதன்மையான சர்வதேச இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சியாக நிலைநிறுத்த உதவியுள்ளன.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ‘ FACETS 2027’ கண்காட்சியின் தொனிப்பொருள் மற்றும் விளம்பர முன்னோட்ட வீடியோவை வெளியிட்டது. அத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கண்காட்சி திகதிகளையும் அறிவித்தது. இது இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறைக்கான முக்கிய நிகழ்வாக இக்கண்காட்சி விளங்குவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி, ‘ FACETS Sri Lanka 2028’ கண்காட்சி ஜனவரி 5 முதல் 7 ஆம் திகதி வரையும், ‘FACETS Sri Lanka 2029’ கண்காட்சி ஜனவரி 4 முதல் 6 ஆம் திகதி வரையும், ‘FACETS Sri Lanka 2030’ கண்காட்சி ஜனவரி 6 முதல் 8 ஆம் திகதி வரையும் நடைபெறும்.
இந்த நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLGJA) தலைவர் அக்ரம் காசிம் கருத்துத் தெரிவிக்கையில்: “FACETS 2027 என்பது இலங்கையின் மிகச்சிறந்த அடையாளங்களை பிரதிபலிக்கிறது. இது நமது பல நூற்றாண்டுகள் பழமையான இரத்தினக்கல் பாரம்பரியம், திறமையான கைவினைஞர்கள், தொழில்முனைவோர் மற்றும் நமது புதுமைப் படைப்பாற்றல் ஆகியவற்றை ஒன்றிணைக்கிறது. இலங்கை என்பது வெறும் அரிய வகை இரத்தினக்கற்களின் பிறப்பிடம் மட்டுமல்ல, உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகத்தில் சிறந்து விளங்கும் ஒரு நம்பகமான இடமாகும் என்பதை இது உலகிற்கு நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
FACETS Sri Lanka 2027 கண்காட்சியின் தலைவர் ஷெஸ்மின் மன்சூர் மேலும் கூறுகையில்: “இலங்கையின் மிகச்சிறந்த இயற்கை பொக்கிஷங்களின் பயணத்தை FACETS 2027 உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. FACETS என்பது வெறும் கண்காட்சி மட்டுமல்ல, அது நமது பாரம்பரியம், நமது கைவினைஞர்கள் மற்றும் இலங்கையை உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையில் ஒரு நம்பகமான முன்னணியாளராக நிலைநிறுத்தியுள்ள அந்த முழுமையான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கொண்டாட்டமாகும். இயற்கையின் மிக அரிய பொக்கிஷங்களையும், அதன் பின்னால் உள்ள மனிதர்களையும், ஒவ்வொரு பட்டை தீட்டலின் (Facet) நோக்கத்தையும் கண்டறியுமாறு உங்களை நாங்கள் அழைக்கிறோம். FACETS என்பது உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்காலத்தை வடிவமைக்கும் மற்றும் சிறந்து விளங்குவதைக் கொண்டாடும் ஒரு தளமாகும்” என்று குறிப்பிட்டார்.
இந்தக் கருத்தை வழிமொழிந்து, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (SLGJA) செயல்பாட்டுத் துணைத் தலைவரும் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியுமான (COO) ஷெசான் மன்சூர் கூறுகையில்: “நாட்டின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் காட்சியாக விளங்கும் இந்த நிகழ்வு, ஒரு கண்காட்சி என்பதற்கும் மேலானது — இது வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான ஒரு ஊக்கியாகும். முன்னனி அனுசரணையாளர்கள், மதிப்புமிக்க பங்காளிகள், இத்துறை சார்ந்த பங்குதாரர்கள் மற்றும் சர்வதேச வர்த்தகர்களை ஒன்றிணைப்பதன் மூலம், வணிகங்களுக்கான புதிய வாய்ப்புகளைத் திறக்கும் ஒரு தளத்தை நாங்கள் உருவாக்குகிறோம். இது உலகளாவிய இரத்தினக்கல் மற்றும் ஆபரணச் சந்தையில் இலங்கையின் நிலையை வலுப்படுத்துவதுடன், நமது துறையின் விதிவிலக்கான கைவினைத்திறன் மற்றும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகிறது. அர்த்தமுள்ள கூட்டாண்மைகளை ஊக்குவித்து, இத்துறையின் எதிர்காலத்தை வழிநடத்தப்போகும் இந்த நிகழ்விற்கு பங்கேற்பாளர்களை வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்” என்று தெரிவித்தார்.
FACETS Sri Lanka 2027 என்பது வெறும் மற்றொரு கண்காட்சி அல்ல. இது பல நூற்றாண்டுகளைக் கடந்து தொடரும் ஒரு பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும்; இங்கு பாரம்பரியமும் புத்தாக்க படைப்பாற்றலும் ஒன்றிணைகின்றன, இலங்கையின் கைவினைஞர்கள் உலகை எதிர்கொள்கிறார்கள், மேலும் ஒவ்வொரு பட்டை தீட்டலும் (Facet) மிகச்சிறந்த நேர்த்தியின் கதையைக் கூறுகிறது.


You must be logged in to post a comment.