வவுணதீவு சம்பவம்: முன்னாள் போராளியை விடுவிக்க ஜனாதிபதி இணக்கம்
மட்டக்களப்பு, வவுணத்தீவில் கடந்த நவம்பர் மாதம் இரண்டு பொலிஸார் சுட்டும், வெட்டியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் போராளி அஜந்தன் விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர் மனோ கணேசனிடம் இன்று உறுதியளித்துள்ளார்.
மேற்படி படுகொலை சம்பவத்துடன் தேசிய தெளஹீத் ஜமா அத்தின் தலைவரான மொஹமட் சஹ்ரான் குழுவினரே தொடர்பு பட்டுள்ளனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அப்பாவியான நான்கு பிள்ளைகளின் தந்தையான முன்னாள் போராளி கதிர்காமத்தம்பி ராசகுமாரன் என்ற அஜந்தனை விடுவிக்குமாறு அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து, அவரை உடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி பதில் பொலிஸ் மாஅதிபருக்கும், சட்டமா அதிபருக்கும் பணிப்புரை விடுப்பதாக அமைச்சர் மனோ கணேசனிடம், ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அஜந்தனின் மனைவியான செல்வராணி ராசகுமாரனுக்கு அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகம் அறிவித்துள்ளது.
