Local

அரசுடன் இணையுமா முஸ்லிம் காங்கிரஸ்?

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் பரபரப்புடனேயே ஆரம்பித்தது.

மு.காவின் எம்.பிக்கள் மூவர் அரசுடன் பேச்சு நடத்துகின்றனர் என்று பலராலும் கூறப் படுகின்றது.முகநூல்களிலும் எழுதப்பட்டுள்ளன. இது தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என்று ஒருமித்த குரலில் பலர் கேள்வி எழுப்பினர்.

” ஆம். பேசுகின்றோம். இதில் என்ன தவறு இருக்கின்றது?” – என்று கேள்வி கேட்டவாறு எழுந்து நின்று ஒரு போடுபோட்டார் அம்பாறை மாவட்ட எம்.பி. பைசல் காசீம். அம்பாறை மாவட்ட மற்றொரு எம்.பியான ஹரீஸும் அடுத்து எழுந்து நின்று கடும் தொனியில் பேச ஆரம்பித்தார்.

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளிப்பதா? அல்லது இல்லையா ? என்பதைப் பற்றி பேசும் தருணம் அல்ல இது. முஸ்லிம் சமுகத்தின் பாதுகாப்பு, இருப்பைப் பற்றி பேசும் தருணமே இது.

சமூகத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது அது தொடர்பில் மக்கள் எங்களிடம்தான் கேள்வி கேட்பார்கள். மாறாக இங்கு வெட்டியாகப் பேசுகின்ற உயர்பீட உறுப்பினர்களிடம் அல்ல.

“இங்குள்ள பலர் என்னைத் தோற் கடிக்கவே முயற்சி செய்தனர். அல்லாஹ்வுக்கு அடுத்து எனது மாவட்ட மக்கள்தான் என்னைத் தோற்கடிக்க முடியும். எனக்கு வாக்களித்த மக்களின் விருப்பத்துக்கு இணங்கவேதான் நான் செயற்படுவேன்.

“எனது எந்தவொரு முடிவும் கட்சிக்கோ – தலைவருக்கோ துரோகம் இழைப்பதாக இருக்கமாட்டாது.

”முஸ்லிம் சமுகத்தின் பிரச்சினைகளை அரசுடன்தான் பேச வேண்டும். அரசுடன் பேசாமல் வேறு யாருடன் பேச சொல்கிறீர்கள்?

வெட்டித்தனமாக இங்கு யாரும் பேசமுனையக் கூடாது – என்று கடும் ஆக்ரோமாகக் ஹரீஸ் எம்.பி. பேசியபோது உயர்பீடத்தில் பெரும் அமைதி நிலவியது. யாரும் மறு பேச்சு பேசவே இல்லை. ஹரீஸ் எம்.பியின் கருத்துக்களில் நியாயம் உள்ளது என்றார் மு.கா. தலைவர் ஹக்கீம்.

மட்டக்களப்பு மாவட்ட எம்.பியான ஹாபீஸ் நஸீர் அஹமட் பேசும்போதும், தேசியப் பட்டியல் தராமல் ஏமாற்றிய வருடன் இனி நமக்கென்ன பேச்சும் உறவும்? நாம் நமது சமூகம் தொடர்பான விட யங்களை அரசுடன்தான் பேச வேண்டும் – என்றார்.

திருகோணமலை மாவட்ட எம்.பியான தெளபீக் இந்தக் கூட்டத்தில் ஏதும் பேசாவிட்டாலும் ஏனைய எம்.பிக்களின் கருத்துக்களோடு ஒத்துப்போனமையை அவதானிக்க முடிந்தது.

தேசியப் பட்டியல் விடயத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்ற ரீதியில் கருத்துக் கூறிய ஹரீஸ் எம்.பியை மறைமுகமாகச் சாட முனைந்தார் செயலாளர் நிஸாம் காரியப்பர்.

இதற்கும் உயர்பீடத்தினரின் தேசியப் பட்டியல் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார் மு.கா. தலைவர் ஹக்கீம். தேசியப் பட்டியல் விடயத்தில் யாரும் எவருக்கும் துரோகம் செய்யவில்லை. நேர்மையாகவே நடந்தோம் – என்றார் ஹக்கீம்.

அடுத்து தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஆராயப்பட்டன. ரிஷாட் பதியுதீனுக்கு ஆதரவாக வன்னி சென்று உரையாற்றியது மகா தவறு என்று ஹக்கீம் மீது ஒட்டுமொத்த உயர் பீடமும் குற்றம் சுமத்தியது.

இதற்குப் பதிலளித்த ஹக்கீம், நான் அவ்வாறு பேசினாலும் பேசாவிட்டாலும் ரிஷாத் வெற்றி பெற்றுத்தான் இருப்பார். ரிஷாத் தோற்கடிக்கப்படும் நேரமல்ல இது. இந்தத் தேர்தலில் அவர் தோல் வியுற்றிருந்தால் இனவாதிகளின் அடுத்த இலக்கு நான்தான் என்று சுருக்கமாகப் பேசி உயர்பீடத்தினரின் வாயை மூடினார்.

பொத்துவில் மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரு ஊர்களும் நமக்கப் பின்னடைவு. சாய்ந்தமருதில் எனக்குக் காட்டப்பட்டது வெறும் மாயை. இறுதிக் கூட்டத்தைப் பார்த்து முழு சாய்ந்தமருதும் எம்மோடு தான் என்று நினைத்தேன். தேர்தல் முடிவு எனது எண்ணத்தைச் சிதைத்து விட்டது என்று ஹக்கீம் கூறினார்.

மூவாயிரம் வாக்குகளாவது கிடைத்திருக்குமா? என்று உயர்பீடத்தை நோக்கிக்கேள்வி எழுப்பினார் ஹக்கீம். அப்போது, ஒட்டுமொத்த உயர்பீடத்தினரும் ஆம் சேர். அவ்வளவுதான். அதைவிடக் கூடியிருக்காது என்றனர்.

கூட்டத்தின் சுருக்கம் அல்லது முடிவு தொடர்பில் கருத்துத் தெரிவித்த உயர்பீட உறுப்பினர் ஒருவர், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு மு.கா. எம்.பிக்கள் ஆதரவளிப்பர் அல்லது அரசுடன் இணைவர் போல்தான் உள்ளது. பகிரங்கமாகவே கூறி விட்டார்கள் அரசுடன் பேசுகின்றோம் – பேச வேண்டும் என்று. இதைவிட வேறென்ன வேண்டும்? என்றார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading