ஆட்சியமைக்க உரிமை கோரிய விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் திகதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் திகதி எண்ணப்பட்டன.
இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர்.
இதனை தொடர்ந்து, த.வெ.க. தலைவர் விஜய் இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு ஆளுநரை அர்லேகரை சந்தித்தார்.
தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி ஆளுநர் அர்லேகர் வாழ்த்தினார்.
இந்த சந்திப்பின்போது த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன், அருண்குமார், சி.டி.ஆர்.நிர்மல்குமார், வெங்கட்ராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கிய விஜய், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்காக உரிமை கோரினார்.
ஆட்சியமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்த பிறகு, தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.