ஆழ்கடல் குகைக்குள் சுற்றுலா… ஐவர் மரணம்
மாலத்தீவில் நடந்த ஸ்கூபா டைவிங் விபத்தில் ஐந்து இத்தாலியர்கள் மரணமடைந்ததாக, ரோமில் உள்ள வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
50 மீற்றர் ஆழத்தில் உள்ள குகைகளை ஆய்வு செய்ய முயன்றபோது, அந்த ஸ்கூபா டைவிங் வீரர்கள் மரணமடைந்திருக்கலாம் என கருதப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவமானது வாவூ அட்டோலில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கூபா டைவிங் ஈடுபட்டவர்களில் நால்வர், சூழலியல் பேராசிரியர் மோனிகா மான்டெஃபால்கோன், அவரது மகள் மற்றும் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய ஜெனோவா பல்கலைக்கழகக் குழுவின் ஒரு பகுதி என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, கடலுக்கு அடியில் சுமார் 60 மீற்றர் ஆழத்தில் உள்ள ஒரு குகையில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும், மற்ற நான்கு பேர்களும் அங்கேயே இருக்கலாம் என நம்பப்படுவதாகவும் மாலத்தீவின் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும், சிறப்பு உபகரணங்களுடன் பல்வேறு குழுக்கள் அப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தேடுதல் நடவடிக்கை மிகவும் அதிக ஆபத்து நிறைந்தது எனவும் இராணுவம் தெரிவித்துள்ளது.
பவளத் தீவுகளின் தொடரால் பிரபலமான சுற்றுலாத் தலமாகத் திகழும், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள அந்தச் சிறிய நாட்டில் நிகழ்ந்த மிக மோசமான ஒற்றை நீச்சல் விபத்து இதுவே என நம்பப்படுகிறது.
உள்ளூர் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், அந்த ஐவரும் வியாழக்கிழமை பகல் கடலுக்குள் சென்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் பயணித்த கப்பலின் குழுவினர், பின்னர் அவர்கள் மீண்டும் மேற்பரப்பிற்கு வராததால், அவர்களைக் காணவில்லை எனப் புகார் அளித்தனர்.

இதனிடையே, தலைநகர் மாலேயிலிருந்து தெற்கே சுமார் 100 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அப்பகுதியில், வானிலை சீற்றமாக இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அத்துடன், பயணிகள் படகுகள் மற்றும் மீனவர்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர். மாலத்தீவில் டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் விபத்துகள் ஒப்பீட்டளவில் அரிதானவை, இருப்பினும் சமீபத்திய ஆண்டுகளில் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

You must be logged in to post a comment.