World

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட 45 அமைப்புகளுக்கு தடை

தமிழீழ விடுதலைப் புலிகள் உள்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் திருத்தியமைக்கப்பட்ட 67 அமைப்புகள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, 45 பயங்கரவாத அமைப்புகளாகவும், 22 சட்டவிரோத அமைப்புகளாகவும் வகைப்படுத்தப்பட்டு திருத்தி அமைக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, தமிழீழ விடுதலைப் புலிகள், பாபர் கால்சா இன்டர்நேஷனல், காலிஸ்தான் கமாண்டோ படை, காலிஸ்தான் ஜிந்தாபாத் படை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி, ஹர்கத் உல் முஹாஜூதின், அல் உம்ர் முஹாஜூதின், ஜம்மு காஷ்மீர் இஸ்லாமிய முன்னணி, அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி, சிமி, தமிழ்நாடு விடுதலைப் படை, தமிழ் தேசிய மீட்புப் படை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மக்கள் போர் உள்பட 45 அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா, மக்கள் விடுதலை இராணுவம், தேசிய பெண்கள் முன்னணி, தேசிய மனித உரிமைகள் அமைப்பு கூட்டமைப்பு, அகில இந்திய இமாம்கள் கவுன்சில் உள்பட 22 அமைப்புகள் சட்டவிரோத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகள் இந்தியாவில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு ஆட்சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட உதவி செய்வது கடும் குற்றமாகும்.

அவ்வாறான நபர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading