Local

இன்று வெசாக் பௌர்ணமி தினம்

பௌத்த மதத்தை பின்பற்றும் மக்கள் அனைவரும் புனித வெசாக் தினத்தை இன்று அனுஷ்டிக்கின்றனர்.

புத்த பெருமான், தர்மங்கள் அனைத்தையும் நிறைவேற்றி, ஞானத்தை வளர்த்து, நான்கு உன்னத உண்மைகளைப் புரிந்துகொண்டு, அனைத்து பாவங்களையும் அழித்து உண்மையான ஞானம் பெற்றது, இந்த புனித வெசாக் தினத்தில் ஆகும்.

மனிதனுக்கு ஏற்படுகின்ற அனைத்து துன்பங்களுக்கும் காரணம், அவனது ஆசையே என்ற உண்மையை உணரச் செய்து, அவர்களின் ஆசைகளையும் பற்றுக்களையும் துறக்கச் சொல்லி நல்வழிப்படுத்திய மகானே கௌதம புத்தர் ஆவார்.

பௌத்த தர்மமானது இலங்கையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது இவ்வாறானதொரு பௌர்ணமி தினத்திலேயே ஆகும். முதலாவது வெசாக் கொடியானது 28 ஆம் திகதி மே மாதம் 1885 ஆம் ஆண்டு ஏற்றி வைக்கப்பட்டது.

கௌதம புத்தர் அவர்கள் அருளிச் சென்ற தத்துவங்கள் எண்ணிலடங்காதவை. அவைகள் எக்காலத்துக்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

மனிதன் உயர்வதும் தாழ்வதும் அவனது பிறப்பால் அன்றி, அவனது செயலாலேயே என்பதே புத்த பகவான் அருளிய போதனையின் அடிநாதமாகும்.

கௌதம புத்தரின் போதனைகள் மனிதனையும் சமூகத்தினையும் நல்வழிப்படுத்தும் உன்னதமான நற்கருத்துக்களைக் கொண்டவை. இவரது போதனைகளை சரியாக பின்பற்றி வாழுகின்ற பொழுது மக்கள் மத்தியில் மன அமைதி, சகோதரத்துவம், மனித நேயம், ஒற்றுமை, நட்புணர்வு ஆகிய பண்புகள் உயர்ந்த நிலையில் மேம்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading