Local

இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் உட்பட அறுவர் கைது

மண்டபம் கடல் வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கை அகதிகள் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 300-க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாகச் சட்டவிரோதமாகத் தனுஷ்கோடிக்கு வந்து, தமிழகத்தில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர்.

இவர்கள் அனைவரும் மண்டபம் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

தற்போது இலங்கையின் பொருளாதார நிலை சீராகியுள்ளதால், முகாமில் தங்கியுள்ளவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பலமுறை மனு அளித்தனர்.

இருப்பினும், இவர்கள் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாகத் தமிழகத்திற்குள் நுழைந்ததால், இவர்களை மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதில் சட்டச் சிக்கல்கள் நிலவி வருகின்றன.

இதன் காரணமாக, முகாமில் உள்ள பலர் மீண்டும் சட்டவிரோதப் படகுகள் மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மண்டபம் தெற்குக் கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த மூன்று இலங்கைத் தமிழர்களைக் கியூ பிரிவு பொலிஸார் நேற்று மாலை (27) பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிவ் (48), அவரது மனைவி ராஜினி (47) மற்றும் அவர்களது மகள் திபேந்தினி (20) என்பது தெரியவந்தது.

இவர்கள் சட்டவிரோதப் படகு மூலம் இலங்கைக்குத் தப்பிச் செல்லக் காத்திருந்ததை ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து, அவர்களுக்கு உதவியாக டீசல் மற்றும் பைகளுடன் நின்றிருந்த மண்டபம் எருமைத் தரவைப் பகுதியைச் சேர்ந்த மூவர் என மொத்தம் ஆறு பேரை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ஆறு பேர் மீதும் மண்டபம் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் சிறையில் அடைத்தனர்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading