இலங்கையில் சீரற்ற வானிலை இதுவரை 6 பேர் பலி – ஒருவர் மாயம்
சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 அனர்த்த மரணங்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன், நீரில் மூழ்கி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, நேற்று பெய்த மழையினால் பொல்பிட்டிய மொரஹேனேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் மூன்று பெண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (03) அப்பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக குறித்த வீட்டின் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளதுடன், அதில் சிக்கிய வீட்டிலிருந்த நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நாவலப்பிட்டி சோலங்கந்த பகுதியில் உள்ள கடையொன்றின் மீது திடீரென மண்மேடு சரிந்து விழுந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்தைத் தொடர்ந்து நாவலப்பிட்டி – தொலஸ்பாகே வீதியின் 2ஆம் கம்பத்திற்கு அருகிலுள்ள பகுதி முழுமையாக தடைப்பட்டது.
நேற்று மாலை வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கையின் குறுக்கே உள்ள பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மகாவலி கங்கையில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் வட்டவளை பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவராவார்.
இதேவேளை, நேற்று மதியம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ பகுதியில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் மூழ்கிய வீதியில் பயணித்த நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயுள்ளார்.
இவ்வாறு காணாமல்போனவர் அம்பகமுவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபராவார்.

You must be logged in to post a comment.