இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன.
அவ்வாறு வெளியேறுவோர் மீண்டும் நாட்டுக்கு வருவதில்லை என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வசந்த அதுகோரல மற்றும் லக்ஷ்மன் குமார ஆகியோர் நடத்திய ஆய்விற்கமைய, இந்த விடயம் தெரியவந்துள்ளது.
வெளிநாடு செல்லும் பட்டதாரிகள்
விசேடமாக அறிவியல், விவசாயம் மற்றும் பொறியியல் துறைகளில் கற்ற மாணவர்களின் இடம்பெயர்வு மேலும் அதிகமாக உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் பல்கலைக்கழக கல்விக்காக 87 பில்லியன் ரூபாய் செலவிட்டுள்ளது. இந்த பணம் வரி செலுத்துவோரின் மூலமாக நேரடியாகவும், பல்கலைக்கழகங்களின் சொந்த வருமானம் மூலமும் செலவிடப்படுகின்றது.
ஒவ்வொரு பல்கலைக்கழக மாணவருக்கும் அரசாங்கம் ஆண்டுக்கு 400,000 முதல் 1.4 மில்லியன் ரூபாய் வரை செலவிடுகிறது. இலவச கல்வி பெற்ற மாணவர்கள் இலங்கையை விட்டு சென்றுவிட்டால், அதற்கு அரசாங்க செலவினை திருப்பிச் செலுத்தும் ஒரு பொறுப்புணர்வு அவசியமாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஊதிய வாய்ப்புகள்
நாட்டை நிரந்தரமாகவோ, நீண்டகாலத்திற்கு விட்டு செல்லும் பட்டதாரிகள் குறைந்தது 10,000 – 15,000 டொலர்கள் வரை அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும். அல்லது தங்கள் குடும்பத்தினருக்காக ஆண்டுக்கு 50,000 டொல் வரை வரை நாட்டிற்கு அனுப்ப வேண்டும் என ஆய்வாளர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகள் நாட்டில் பணியாற்றுமாறு கட்டாயப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது. வேலையின்மை மற்றும் குறைந்த ஊதிய வாய்ப்புகள் காரணமாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை வெளிநாடு செல்லுமாறு தூண்டுகின்றனர்.
இந்த ஆய்வு இன்னும் தொடரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் முழுமையான அறிக்கை வெளியிடப்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You must be logged in to post a comment.