World

கண்கலங்கிய முதல்வர் ! காவி உடையில் ஓ.பி.எஸ்- ஜெ.நினைவிடத்தில் சோகமயம்!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன.

உடல்நலக்குறைவு காரணமாக, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் திகதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5ஆம் திகதி இரவு காலமானார் ஜெயலலிதா.எனவே, ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூரப்படுகின்றது.

ஜெயலலிதாவின் நினைவிடம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது. வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடம் வரை அதிமுக சார்பில் இன்று அமைதி ஊர்வலத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காலை 10.30 மணி அளவில் துவங்கிய அமைதி ஊர்வலத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

துக்கத்தை வெளிக்காட்டும் விதமாக இவர்கள் அனைவருமே கருப்புச்சட்டை அணிந்து இருந்தனர். அதிலும் பன்னீர்செல்வம் கருப்புச் சட்டையுடன், காவி வேட்டி அணிந்து இருந்தார். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவருமே கருப்பு சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து இருந்தனர்.

ஊர்வலம், ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைந்ததும், முதலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது மூன்று முறை நினைவிடத்தின் கால்பகுதியில் குனிந்து நின்று வணங்கி எழுந்தார். அப்போது அவரது கண்கள் கண்ணீர் மல்க காட்சியளித்தன.

இதன்பிறகு பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் கால் பகுதியில் குனிந்து மூன்று முறை வணக்கம் செலுத்தினார். அவரது தலை முழுக்க உதிரிப்பூக்கள் ஒட்டிக்கொண்டிருந்தன. அவரது கண்களும் கலங்கிய நிலையில் இருந்தன.
இதனால் அந்த இடமே சோகமயமாக காட்சி அளித்தது. நினைவிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் பன்னீர்செல்வம் உறுதி மொழியை வாசிக்க, அதை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர். பிறகு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading