Jobs

காப்புறுதித் துறை மேம்பாட்டு செயல் திட்டத்தை ஒன்றிணைந்து வெளியிட்ட IRCSL மற்றும் IASL

 

இன்று கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில், இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழு (IRCSL) மற்றும் இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) இணைந்து இலங்கை காப்புறுதித் துறை அபிவிருத்தி வரைபடத்தை வெளியிட்டன. இந்நிகழ்வில் பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் கௌரவ ஆனந்த விஜேபால அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த வரைபடம் இலங்கையின் காப்புறுதித் துறையின் எதிர்கால வளர்ச்சியை வழிநடத்தும் ஒரு மூலோபாயக் கட்டமைப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நெகிழ்வுத்தன்மை, புத்தாக்கம், உள்ளடக்கம் மற்றும் நீண்டகால தேசிய பங்களிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இத்துறை நவீனமயமாக்கல், ஒழுங்குமுறை சீரமைப்பு, டிஜிட்டல் மாற்றம், நிதி அணுகல்தன்மை மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்துதல் உள்ளிட்ட முன்னுரிமைப் பகுதிகளை இந்த முயற்சி கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அரச அதிகாரிகள், ஒழுங்குமுறைப்படுத்துநர்கள், தொழில்துறை தலைவர்கள், காப்புறுதி நிறுவனங்கள், நிதித்துறை பங்குதாரர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இது இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக உறுதிப்பாட்டிற்கு இத்துறை எவ்வளவு முக்கியமானது என்பதைப் பிரதிபலிக்கிறது.

நாடெங்கிலும் காப்புறுதிப் பயன்பாட்டை அதிகரித்தல், பொதுமக்களின் நம்பிக்கை மற்றும் காப்புறுதிதாரர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், டிஜிட்டல் சேவைகள் மற்றும் புத்தாக்கங்களை விரிவுபடுத்துதல், தரவு உட்கட்டமைப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துதல், பொருளாதார உறுதிப்பாடு மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கு ஆதரவளித்தல், மற்றும் இத்துறையின் ஒட்டுமொத்த போட்டித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட இந்த வெளியீடு, இத்துறையின் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்களாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (IRCSL) பணிப்பாளர் நாயகத்தினால் காப்புறுதித் துறை அபிவிருத்தி வரைபடம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அத்துடன், கடன் தகவல் பணியகத்தினால் (CRIB) மத்திய காப்புறுதி தரவு களஞ்சியம் (Centralised Insurance Data Repository) காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், மோட்டார் காப்புறுதி டிஜிட்டல் கார்ட் அறிமுகம், புதிய விதிமுறைகள் மற்றும் முதன்மைச் சுற்றறிக்கை (Master Circular) குறித்த விழிப்புணர்வு அமர்வு மற்றும் ஆணைக்குழுவின் செய்திமடல் வெளியீடு ஆகியவையும் இடம்பெற்றன.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading