World

கொரோனா அச்சுறுத்தல் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை!

கொரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிரான்ஸ் நாடு தடை விதித்துள்ளது.

விடுமுறை கொண்டாட்டங்களால் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அந்த நாட்டின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தினா்.

இதுதொடா்பாக பத்திரிகையாளா் சந்திப்பில் பேசிய பிரான்ஸ் பிரதமா் ஜீன் காஸ்டெக்ஸ், ‘கொரோனா 5 ஆவது அலை தீவிரமடைந்து வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, விடுமுறைக் காலங்களில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் புத்தாண்டு கலைநிகழ்ச்சிகளை நடத்துவதற்கும், வாண வேடிக்கை நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவதைத் தவிா்க்க வேண்டும் என்பதோடு, கிறிஸ்துமஸ் விழாவிலும் குடும்ப உறுப்பினா்கள் குறைந்த எண்ணிக்கையில் கூட வேண்டும் என்றாா் அவா்.

ஏற்கெனவே, ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அபாயம் காரணமாக ஐரோப்பிய யூனியன் அல்லாத நாடுகளிலிருந்து பிரான்ஸுக்கு மக்கள் வருவதற்கு அந்நாடு கட்டுப்பாடு விதித்துள்ளது. பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பு மிக அதிகமாக இருப்பதால் அந்த நாட்டிலிருந்து வருவதற்கும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டுக்கு பயணம் செய்வதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும், 48 மணி நேர தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அந்த நாடு விதித்துள்ளது.

மேலும், பிரான்ஸில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அதிகாரிகள் தீவிரப்படுத்தியிருப்பதோடு, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு முன்பாக பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியையும் மேற்கொண்டு வருகின்றனா்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading