Local

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்!!

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளதால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்கவின் கையொப்பமிட்ட உத்தியோகபூர்வ சுற்றறிக்கையின் மூலம் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சின் செயற்பாடுகளுக்கமைய தொடர்ச்சியான சேவை வழங்கல் அவசியமாகியுள்ள நிலையில், பணியாளர்கள் அடிக்கடி விடுமுறையில் செல்லுவதால் அச்சேவைகள் இடையூறுக்குள்ளாகி வருவதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, வேலைநாடு செல்வதற்கான விடுமுறைகளை அனுமதிப்பதும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் கீழ் காணப்படும் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சுகாதார அமைச்சின் செயலாளரின் சுற்றறிக்கையில் வெளிநாடு செல்வதற்கான விடுமுறை பெறுவதற்கு நிறுவன வழிகாட்டல் கையேட்டில் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிற்கு, ஶ்ரீ லங்கா சுதந்திர சுகாதார சேவைகள் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

வெளிநாடு செல்ல விடுமுறைக்கு விண்ணப்பித்து, உரிய பயிற்சி மற்றும் வீசாக்கள் போன்றவற்றைப் பெற்றுள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த புதிய சுற்றறிக்கையால் கடுமையாக சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக, அச்சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading