தேசபந்து விவகாரத்தில் ரணிலுக்கு எதிராக திரும்பும் விசாரணை..!
அரசியலமைப்பு சபையின் முறையான ஒப்புதல் இல்லாமல் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, குறித்த மனு செப்டம்பர் 08ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் இன்று(28.05.2025) தெரிவித்துள்ளது.
தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்ததை எதிர்த்து, கர்டினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் இளம் பத்திரிகையாளர்கள் சங்கம் உட்பட ஒன்பது தரப்பினர், 2023ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
அரசியல் சபையில் பெரும்பான்மை வாக்குகளால் அவரது நியமனம் நிறைவேற்றப்படாத நிலையில், ரணில் விக்ரமசிங்க, தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபராக நியமித்தமை அரசியலமைப்புக்கு எதிரானது என மனுதாரர்கள் கூறுகின்றனர்.

தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் தென்னக்கோனை பொலிஸ் மா அதிபராக நியமிக்கும் முடிவை செல்லாது என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறிருக்க, தேசபந்து தென்னக்கோன், பொலிஸ் மா அதிபர் பதவியின் கடமைகள் மற்றும் அதிகாரங்களை செய்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மேலும், இந்த மனுவின் விசாரணை முடியும் வரை இடைக்காலத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 35ஆவது பிரிவின்படி, இலங்கையில் பதவியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தனது பதவிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகின்றார்.
இருப்பினும், ஜனாதிபதியின் முடிவுகளை சவால் செய்யும் விசாரணைகள் அல்லது அடிப்படை உரிமை மனுக்களை இந்த சட்டம் தடுக்காது.

You must be logged in to post a comment.