Local

நாடு சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணிப்பதாக சஜித் அணி தெரிவிப்பு!

சர்வாதிகார ஆட்சியை நோக்கி பயணிப்பதற்கான ஆரம்பமே அரசியலமைப்பின் ’20’ ஆவது திருத்தச்சட்டமூலமாகும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

அத்துடன், அரசியலமைப்பு பேரவை இல்லாமல் செய்யப்பட்டதன் ஊடாக உயரிய சுயாதீன நிறுவனங்களுக்கு தமது விசுவாசிகளை நியமிக்ககூடிய வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இது பயங்கர நிலைமையாகும் என்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவான லக் ஷ்மன் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ’20’ ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்பு பேரவை இல்லாமல் செய்யப்பட்டுள்ளமை குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

வடமேல் மாகாண தேர்தலின்போது பொலிஸ் மற்றும் சில அரச சேவையாளர்கள் அரசாங்கத்துக்கு சார்பாக செயற்பட்டதால் அத்தேர்தல் முடிவடைந்தகையோடு நாட்டிலுள்ள உயர் நிறுவனங்களான நீதிமன்றம், பொலிஸ், அரசசேவை ஆகியன சுயாதீனமாக்கப்படவேண்டும் என்ற கருத்து உருவானது. இதனை அடிப்படையாகக்கொண்டே 2001ஆம் ஆண்டு 17ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

சந்திரிக்கா அம்மையாரால் கொண்டுவரப்பட்ட 17 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்துக்கட்சிகளும் ஆதரவு வழங்கின. உயர் நிறுவனங்கள் சுயாதீனமாக்கப்படவேண்டும் என்பதே சட்டமூலத்தின் பிரதான நோக்கமாக இருந்தது. இதன்படி அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது.

குறிப்பாக உயர் நிறுவனங்களின் பதவிகளுக்கு, நிறைவேற்று ஜனாதிபதியால் அனுப்படும் நபர்களின் பெயர்களைக்கூட நிராகரிக்கும் அதிகாரம் அப்பேரவைக்கு வழங்கப்பட்டிருந்தது.

எனினும், 18 ஆவது திருத்தச்சட்டம்மூலம் 17 இல்லாதொழிக்கப்பட்டு அனைத்து அதிகாரங்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டன. உயர் பதவிகளுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்கினார்.

இந்நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் அல்லது இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தாடல் உருவானது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவோம் என உறுதியளித்தே நாம் தேர்தலை எதிர்கொண்டோம் .

2015 இல் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்ற பின்னர், நிறைவேற்று அதிகாரங்களைக் குறைப்பதற்கு இணங்கினார். 99 சதவீத அதிகார குறைப்புடன் 19ஆவது திருத்தச்சட்டமூலம் உயர்நீதிமன்றத்துக்கு சென்றது. சில விடயங்களை மாற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என நீதிமன்றம் சட்டவியாக்கியானம் வழங்கியது. எனவே, சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத விதத்தில் ’19’ மாற்றியமைக்கப்பட்டு
நிறைவேற்றப்பட்டது.

அதன்மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டது. அரசியலமைப்பு பேரவை உருவாக்கப்பட்டது. சுயாதீன நிறுவனங்களுக்கு உறுப்பினர்களை ஜனாதிபதி தெரிவுசெய்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரம் பேரவைக்கு காணப்பட்டது. இதன்மூலம் நீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கின.

20 ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக நாடாளுமன்ற பேரவை உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அதிகாரங்கள் இல்லை. ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க மட்டுமே முடியும். அதனை ஜனாதிபதி ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம். எனவே, முப்படை தளபதிகள், நீதிச்சேவை ஆணைக்குழுவின் தலைவர் உட்பட சுயாதீன நிறுவனங்களுக்கான நியமனங்களை ஜனாதிபதியே வழங்குவார்.

இதனால் உயர் பதவிகளை வகிப்பவர்களுக்குசுயாதீனமாக செயற்படமுடியாத நிலை ஏற்படும். எவ்வாறு அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானங்களை வழங்குவது என்ற அச்சநிலையும் உருவாகும். உயர் நிறுவனங்கள் சுயாதீனமாக செயற்படாவிட்டால் நாட்டை முன்நோக்கி அழைத்துச்செல்லமுடியாது.
ஆக சர்வாதிகாரத்தை நோக்கிய பயணத்தின் ஆரம்பமே 20 ஆவது திருத்தச்சட்டமூலமாகும்.

நாடாளுமன்றத்தை ஒரு வருடத்துக்கு பிறகு ஜனாதிபதியால் கலைக்கமுடியும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் எவ்வாறு நிலையானதொரு ஆட்சியை எதிர்ப்பார்க்கமுடியும்.” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading