Local

நாட்டில் அதிகூடிய மின்சார கேள்வி திங்கட்கிழமை!

நிலவும் வறட்சியான காலநிலையுடன், இலங்கையின் வரலாற்றில் அதிகப்படியான மின்சாரத் தேவை கடந்த திங்கட்கிழமை பதிவாகியுள்ளதாக தேசிய கட்டமைப்பு செயற்பாட்டு தனியார் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி பி.எல். பிரதீப் பியதர்ஷன பெரேரா தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், குறித்த மின்சாரத் தேவை 3,089 மெகாவாட்டாகப் பதிவாகியுள்ளதாகவும், அன்றைய தினம் முதல் இன்று வரை மின்சாரத் தேவை 3,000 மெகாவாட் அளவிலேயே பதிவாகி வருவதாகவும் கூறினார்.

மின்சார உற்பத்திக்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தேவையான எரிபொருளை வழங்கி வருவதாகவும், இதனால் இதுவரை மின்சாரத் தடையை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும், மின்சாரத் தேவை அதிகரித்துள்ளதால் அனைத்து நுகர்வோரையும் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் நாட்டில் வறட்சியான காலநிலையைக் கொண்டவை. இந்த வறட்சியுடன் மின்சாரத் தேவையும் அதிகரித்துள்ளது.

உதாரணமாக, இலங்கையின் மின் கட்டமைப்பில் இதுவரை வழங்கப்பட்ட மின்சாரத் தேவையின் அதிகப்படியான அளவு கடந்த வாரம் திங்கட்கிழமை பதிவானது. அது 3,089 மெகாவாட்டாகும். அதேபோல் அன்றைய மின் நுகர்வு 60.56 கிகாவாட் மணித்தியாலங்களாக காணப்பட்டது.

வறட்சியான காலநிலை மற்றும் எரிபொருள் நெருக்கடி நிலவும் சூழலிலும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் எமது தேவைக்கேற்ப எரிபொருளை வழங்குகிறது.

எனவே, இலங்கையில் எவ்விடத்திலும் மின்வெட்டு இன்றி மின்சாரத்தை வழங்க முடிகிறது. அன்றிலிருந்து இன்று வரை மின்சாரத் தேவை 3,000 மெகாவாட் என்ற சாதனை அளவிலேயே நீடிக்கிறது.

தொடர்ச்சியான மின்சார விநியோகத்தை நாம் வழங்கி வருகிறோம். எனவே, மின்சாரத்தை முடிந்தவரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு ஒரு நாடாக அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading