Local

நீதி அமைச்சர் அலி சப்றியிடம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்ட பிக்கு!

நீதியமைச்சர் அலி சப்றிக்கு (Ali Sabry) அவப்பெயர் மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்துக்களையும் இனிவரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என சிங்களே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர், (Medille Panjaloka) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் முன்னிலையில் வாக்குறுதி வழங்கியுள்ளார்.

அத்துடன் நீதியமைச்சரிடம் அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் பேசி, அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டதன் மூலம் தனது நற்பெயருக்கு பங்கம் ஏற்பட்டதாக கூறி, நீதியமைச்சர் இழப்பீடு கோரி தாக்கல் செய்திருந்த வழக்கை சமரசம் செய்து வைக்கும் போதே பஞ்ஞாலோக்க தேரர் இதனை கூறியுள்ளார்.

நீதியமைச்சருக்கும் பஞ்ஞாலோக்க தேரருக்கும் இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட சமரச உடன்படிக்கை நிபந்தனைக்கு அமைய தேரர் வாக்குறுதியை வழங்கியுள்ளார்.

தனது நற்பெயருக்கு ஏற்பட்ட பங்கத்திற்காக 150 கோடி ரூபாய் இழப்பீட்டை பெற்று தருமாறு கோரி நீதியமைச்சர் கடந்த ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

பிரதிவாதியான பஞ்ஞாலோக்க தேரர், வலையெளி, முகநூல் உட்பட ஏனைய சமூக வலைத்தளங்களில் மேற்கொண்டு வரும் அவதூறுகளை தடை செய்யுமாறு கோரியிருந்தார்.

கொழும்பு மாவட்ட நீதிபதி அருண அளுத்கே முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடன் இரண்டு தரப்பும் செய்துக்கொண்டுள்ள சமரசத்திற்கு அமைய வழக்கை முடித்து வைக்குமாறும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading