World

நெப்போலியன் திருடிய 80 ஆயிரம் கிலோ தங்கத்தை தேடும் ரஷ்யா

1812 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் ஏற்பட்ட பேரழிவுகரமான பின்வாங்கலின் போது பிரெஞ்சு இராணுவ தளபதி நெப்போலியனால் திருடப்பட்டதாக கூறப்படும் பொக்கிஷத்தை பற்றிய புராணக்கதை குறித்து ஒரு புதிய கோட்பாட்டை ரஷ்யாவை சேர்ந்த வரலாற்றாசிரியர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.

200 ஆண்டுகளாக புதையல் வேட்டைக்காரர்கள் தவறான இடத்தில் புதையலைத் தேடிக்கொண்டிருப்பதாக கூறும் விகாஸ்லேவ் என்னும் அந்த வரலாற்றிசிரியர், பெலாரஸ் எல்லையோரத்திற்கு அருகே உள்ள தனது சொந்த நகரமான ருட்னியனுக்கு தங்கள் கவனத்தை அவர்கள் திருப்ப வேண்டுமென்று உள்ளூர் செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் பல பகுதிகளை தனது “கிரேட் ஆர்மி” என்ற பெயர் கொண்ட படையினால் வென்ற நெப்போலியன், ரஷ்யாவின் மாஸ்கோ நகரின் மீது நடத்திய படையெடுப்பில் படுதோல்வியுற்றவுடன் அங்கிருந்து திரும்பும்போது 80 டன் தங்கத்தையும், ஏனைய மதிப்புமிக்க பொருட்களையும் திருடியதாகவும், பிரான்சுக்கு அவற்றை கொண்டுசெல்வது மிகவும் கடினமானதாக இருந்ததால் அவற்றை செல்லும் வழியில் புதைத்துவிட்டதாகவும் கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக கூறப்பட்டு வருகிறது.

அதற்கடுத்து, அந்த புதையலை அடைய விரும்புகிறவர்களை திசை திருப்புவதற்காகவே தவறான இடத்தை அந்த அதிகாரி தெரிவித்ததாக கூறிய மற்ற வரலாற்றாசிரியர்கள், அந்த புதையல் பெலாரஸிலுள்ள பேரெஜினே என்ற ஏரியில் மறைந்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினர்.

ரஷ்யா உளவாளிகளை குழப்புவதற்காகவே, புதையல் செம்லேவோ ஏரியில் மறைக்கப்பட்டதை போன்ற பிம்பத்தை நெப்போலியன் தனது ஆட்களை அனுப்பி ஏற்படுத்தியதாக வரலாற்றாசிரியர் விகாஸ்லேவ் கூறுகிறார். இந்நிலையில், தங்கம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க பொருட்கள் ருட்னியன் நகருக்கு அருகியுள்ள போல்ஷயா ருடாவெச் ஏரிப் பாலத்தின் வழியே கொண்டுசெல்லப்பட்டு அதன் மையப்பகுதியில் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்.

விலை மதிப்புமிக்க பொருட்கள் புதைக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அந்த பாலம் அரித்துப்போய்விட்டதாகவும், அதுமட்டுமின்றி 1989ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட்ட ஆய்வு ஒன்றில் அந்த ஏரியின் தண்ணீரில் வெள்ளித் துகள்கள் அதிக அளவில் காணப்படுவது கண்டறியப்பட்டது என்றும் விகாஸ்லேவ் மேலும் கூறுகிறார்.

இந்நிலையில், இந்த வரலாற்றாசிரியரின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, ஏரியின் படுகையில் சிக்குண்டுள்ள புதையலை சரியான உபகரணங்கள், வல்லுநர்களை கொண்டு மீட்க முடியுமென்று அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இருந்தபோதிலும், மேற்கண்ட கூற்றை அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. புதையலைத் தேடுவதை முழுநேர பணியாக மேற்கொள்பவரும், நெப்போலியன் புதைத்து சென்றதாக கூறப்படும் இந்த புதையலை தேடுவதில் நீண்டகாலத்தை செலவிட்டவருமான விளாடிமிர் போரிவாயேவின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டதாக உள்ளன.

“இந்த புதையல் ஒரு புனைவு. நெப்போலியனின் ரஷ்ய படையெடுப்பின் ஒவ்வொரு நாளையும் வரலாற்றாசிரியர்கள் பல நூற்றாண்டுகளாக பதிவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், நெப்போலியன் தனது மொத்த படையினரையும் கைவிட்டுவிட்டு, தங்கத்தை கொண்டுசென்றதாக கூறுவது முற்றிலும் சாத்தியமற்றது” என்று விளாடிமிர் போரிவாயேவ் கூறுகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading