Features

புற்றுநோயை முற்றாக குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!

அமெரிக்காவின் மன்ஹட்டானில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் நினைவு புற்றுநோய் மையம் மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் புற்றுநோயை 100 சதவீதம் குணப்படுத்தும் டோஸ்டார்லிமாப் (dostarlimab) என்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்தை வைத்து நடத்தப்பட்ட சோதனையில், கீமோதெரபி மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவற்றை வழங்காமல், டோஸ்டார்லிமாப் மருந்து கொடுத்தே நோயாளிகளை 100 சதவீதம் கேன்சரில் இருந்து முற்றிலும் குணமடைய வைத்துள்ளனர். இந்த மருந்து மொத்தம் 18 குடல் புற்று நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து கொடுத்த பின் அவர்கள் முற்றிலும் நோயில் இருந்து குணமடைந்துள்ளனர். எம்ஆர்ஐ, பிஇடி எனப்படும் பாசிட்ரான் எமிஷன் டோமோகிராபி என்று அனைத்து சோதனைகளிலும் புற்றுநோய் உடலில் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த நோயாளிகள் சிலர் ஏற்கனவே வேறு விதமான சிகிச்சைகளைப் பெற்று, அதன் காரணமாக குணப்படுத்த முடியாத நிலையை அடைந்தனர்.

அவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து கொடுக்கப்பட்டதில் குணமடைந்துள்ளனர். பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெறும் நபர்களுக்கு, சிகிச்சைக்குப் பின் பக்க விளைவுகள் இருக்கும். ஆனால் இவர்களுக்கு அந்த மாதிரியான பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிகிச்சை அளிக்கப்பட்டு 25 மாதங்கள் கழிந்தும் அவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் செல்கள் எதுவும் தோன்றவில்லை என்றும் டோஸ்டர்லிமாப் மருந்தை ஸ்பான்சர் செய்த கிளாக்ஸோ ஸ்மித்க்லைன் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுக் கட்டுரையை எழுதியுள்ள மருத்துவர் ஆண்ட்ரியா செரிக் கூறியதாவது:-

இந்த மருந்து சிறப்பாகச செயற்படுகிறது. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு டோஸ்டர்லிமாப் மருந்து உடலில் மூன்று வாரங்களுக்கு ஒரு முறை என 6 மாதங்களுக்கு செலுத்தப்படும். பொதுவாக புற்றுநோய் செல்கள் உடலின் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பிப்பதற்காக முகமூடி போன்ற ஒரு படலத்தைக் கொண்டு மறைந்து இருக்கும். இதனால் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள் புற்றுநோய் செல்களைக் கண்டறிய முடியாது. ஆனால் இந்த மருந்து அந்த முகமூடியை நீக்குவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி செல்கள், சுயமாக புற்றுநோய் செல்களை அழிக்க வழி செய்கிறது. இதனால் இயற்கையாக புற்றுநோய் செல்கள் அழிகின்றன. பொதுவாக இது போன்ற சிகிச்சைகள் பக்க விளைவை ஏற்படுத்தும். ஆனால் டோஸ்டர்லிமாப் சிகிச்சை முறை அப்படி பக்க விளைவு எதையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. மோசமான நிலையை அடைந்தவர்களைக் கூட இந்த மருந்து குணமாக்கி உள்ளது. இவ்வாறு ஆண்ட்ரியா செரிக் கூறியுள்ளார்.

இந்த மருந்து மூலம் சிகிச்சை எடுக்க இந்திய மதிப்பில் ரூ. 9 லட்சம் வரை ஆகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மருந்தை மற்ற மருத்துவர்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பே இந்த மருந்து சந்தைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு சில மாதங்கள், வருடங்கள் ஆகலாம். அதேபோல் இந்த மருந்து எவ்வளவு காலத்தில் நோயாளிகளைக் குணமாக்கும் என்பதிலும் சில சந்தேகம் உள்ளதால் அதைப் பற்றி கூடுதல் ஆய்வுகளும் விரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading