FeaturesLocal

பூமியை விழுங்கப் போகும் சூரியன் ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

உலகில் வெப்பமின்றி உயிர்கள் வாழ முடியாது என்பது அடிப்படை அறிவியல் தத்துவம். இன்று செயற்கையாகப் பல வழிகளில் வெப்பமூட்டலாம். ஆனால் செடி கொடிகள், பாக்டீரியா, வைரஸ், விலங்கினங்கள் போன்றவைகட்கு சூரியன் மட்டுமே இயற்கையான வெப்பமூட்டி.

அப்பேர்பட்ட சூரியன் அணு இயற்பியலின் அடிப்படையில் இயங்கும் ஒரு ராட்சத நெருப்புப் பந்து. அது தான் பல லட்சம் ஆண்டுகளாகப் பூமி கோளின் உயிர்நாடியாக இருந்து வருகிறது.

ஆனால் சூரியன் எப்போதும் சிரித்த முகத்தோடு உயிர்களை வாழவைத்துக் கொண்டிருக்காது. ஒருகட்டத்தில் தன்னுள் இருக்கும் ஹைட்ரஜன் வாயுவை வெளிப்படுத்திச் சுற்றியுள்ளவற்றை எல்லாம் எரித்து சாம்பலாக்கத் தொடங்கும்.

கிட்டத்தட்ட 5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, நம் சூரியன் ஒரு சிவப்பு ராட்சத பந்தாக மாறும். அப்போது தன்னைச் சுற்றியுள்ள கோள்களை ஒவ்வொன்றாக விழுங்கத் தொடங்கும். அப்போது நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் புதன், வெள்ளி போன்ற கோள்கள் சூரியனின் கோரப் பசிக்கு எளிதில் இரையாகலாம். அவ்வளவு ஏன் பூமி கூட சூரியனின் கோபத்துக்கு அப்போது பலியாக வாய்ப்புகள் அதிகம் என்கிறது விஞ்ஞான உலகம்.

அப்படி ஒரு மோசமான காலம் நம் சூரிய குடும்பத்துக்கு வருவதற்கு முன், கிட்டத்தட்ட மனித இனமே பூமியிலிருந்து அழிந்துவிடும் காலம் கூட வரலாம் என்கிறது அறிவியல் உலகம்.

இது தொடர்பாக ராயல் ஆஸ்ட்ரோனாமிகல் ஜர்னல் என்கிற சஞ்சிகையில் ஓர் ஆய்வு பிரசுரமாகியுள்ளது. அதில் சூரியனைப் போன்ற வெப்பமான வாயு நிறைந்த நட்சத்திரத்தில், புதன், வெள்ளி போன்ற கோள்களோடு நேரடி தொடர்பு ஏற்படும் போது, சூரியன் எதிர்கொள்ளும் கோளின் அளவைப் பொறுத்து பல்வேறு மாற்றங்கள் ஏற்படும், அதோடு நட்சத்திரத்தின் பரிணாம வளர்ச்சியிலும் மாற்றம் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சூரியன் தனக்கு அருகில் உள்ள கோளை உட்கொண்டால், கோளின் நிறை மற்றும் சூரியன் போன்ற நட்சத்திரத்தின் பரிணாம வளர்ச்சியைப் பொருத்து, சூரியனின் ஒளிரும் திறன் அடுத்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என்று அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு முப்பரிமாண சோதனையாக மேற்கொண்ட பிறகே அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ஆய்வை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ரிகார்டோ யார்சா என்பவர் முன்னின்று நடத்தியுள்ளார்.

நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் வியாழன் கோளைப் போல 100 மடங்கு அதிக நிறை கொண்ட, சூரியனின் விட்டத்தை விட சுமார் 10 மடங்கு பெரிய கோள் கூட, சூரியனிலிருந்து தப்ப முடியாது என்றும் ரிகார்டோ யார் சாவின் அணியினர் கூறியுள்ளனர்.

தற்போது நாம் பார்க்கும் சூரியன் சுமார் 4.57 பில்லியன் ஆண்டு வயதானது. அது தன்னுடைய நடுத்தர வயதில் இருக்கிறது. வழக்கம் போல தனக்குள் இருக்கும் ஹைட்ரஜன் வாயுவை ஃப்யூஷன் செயல் முறையில் எரித்து ஹீலியம் வாயுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. எப்போது சூரியனில் ஹைட்ரஜன் வாயு தீர்கிறதோ, அப்போது சூரியன் ஒரு பெரிய ராட்சத சிவப்பு நட்சத்திரமாகிவிடும், அதன் மேற்பரப்பின் வெப்பநிலையும் குறைந்துவிடும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading