பெற்றோல் 74 , டீசல் 67 ரூபாயினாலும் உடன் அமுலுக்கு வரும்வகையில் விலை குறைத்தது ..!!
பாகிஸ்தானில் எரிபொருள் விலையை பெருமளவில் குறைப்பதற்கு அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஒரு லீட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாயினாலும், ஒரு லீட்டர் டீசலின் விலை 67 ரூபாயினாலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, புதிய விலை திருத்தத்துடன் இதுவரை 373 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் பெட்ரோலின் புதிய விலை 299 ரூபாய் வரை குறைகிறது. அத்துடன் 378 ரூபாயாக இருந்த ஒரு லீட்டர் டீசலின் விலை 311 ரூபாய் வரை வீழ்ச்சியடையும்.
பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் தலையீட்டுடன் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததும் ஹோமுஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்தும் பாகிஸ்தான் அரசு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடுமையான பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான், அந்நாட்டின் எரிபொருள் விலையை உயர்த்தியதும் அமெரிக்க – ஈரான் யுத்த நெருக்கடி மற்றும் ஹோமுஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரான் நடவடிக்கை எடுத்ததைத் தொடர்ந்தேயாகும்.
“எங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இறை ஆசியுடன் நாங்கள் நிறைவேற்றி வருகிறோம். சாத்தியமான முதல் சந்தர்ப்பத்திலேயே உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையைக் குறைப்பதாக நான் கூறியிருந்தேன். இப்போது அதை நான் நிறைவேற்றுகிறேன்.
நிலவும் கடினமான பொருளாதார சூழ்நிலைகளுக்கு மத்தியில் நாட்டின் மக்கள் எதிர்கொள்ளும் துயரங்களை நாங்கள் நன்கு உணர்ந்திருந்தோம். அந்த இக்கட்டான காலத்தில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து, பொறுமையுடன் செயற்பட்ட மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment.