முதலமைச்சர் விஜயை புகழ்ந்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசிய நிலையில் அமமுக எம்.எல்.ஏ காமராஜ் டி.டி.வி தினகரனால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். காமராஜ், கட்சியின் கொள்கைகளுக்கு முரணாகச் செயற்பட்டதாகக் கூறி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் தன்னிச்சையாக ஆதரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்ற நிலையில், சட்டமன்றத்தில் அவருக்கு எஸ். காமராஜ் தன்னிச்சையாக ஆதரவு தெரிவித்ததே இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் நிலைப்பாட்டை மீறி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்தது, அவருக்காகப் பாடுபட்ட தொண்டர்களுக்கும் வாக்களித்த மன்னார்குடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
கட்சியின் கண்ணியத்திற்கு மாசு விளைவிக்கும் வகையில் செயற்பட்டதால், அவர் இன்று முதல் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காகப் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, காமராஜ் ஆதரவுக் கடிதம் வழங்கியதாகத் தகவல் வெளியானது.
கட்சியின் முடிவை மீறி புதிய கட்சிக்கு ஆதரவு
எனினும், அந்தக் கடிதம் போலியானது என டி.டி.வி. தினகரன் ஆளுநரிடம் முறைப்பாடு அளித்திருந்ததுடன், தான் அத்தகைய கடிதத்தில் கையெழுத்திடவில்லை என காமராஜும் மறுப்புத் தெரிவித்திருந்தார்.

தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்று, மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதையடுத்து, அவரை எஸ். காமராஜ் பாராட்டியிருந்த நிலையிலேயே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது கட்சியின் முடிவை மீறி புதிய கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


You must be logged in to post a comment.