Lead NewsLocal

மைத்திரி துரோகி! மனநோயாளி!! – சபையில் பொன்சேகா ஆவேசம்; சரமாரியாக சொற்கணைகள் தொடுப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரவில் ஒன்றையும், பொழுது விடிந்ததும் வேறொன்றையும் கூறும் கொள்கையற்ற அரசியலை முன்னெடுத்து வருகின்றார் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி. குற்றஞ்சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய சரத் பொன்சேகா எம்.பி., ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சித்தார். ஒருகட்டத்தில் ‘பைத்தியக்காரன்’ என்று கூட விளாசித்தள்ளினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களை சந்தித்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என் பெயரை விளித்து விமர்சித்துள்ளார். 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால் இவ்வாறு கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச்சு நடத்தியிருக்கமாட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவில் நான் ஜனாதிபதி ஆகியிருந்தால், தற்போதைய ஜனாதிபதி போல் செயற்பட்டிருக்கமாட்டேன். அரசமைப்பை அப்பட்டமாக மீறும் வகையில் தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டேன். ரணில் விக்கிரமசிங்கவின் காலை வாரியிருக்கமாட்டேன்.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து மெதமுலனையில் ஜன்னலில் தொங்கிக்கொண்டிருந்த நபரை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்தியிருக்கமாட்டேன்.

வாரம் ஒருதடவை வெளிநாட்டுக்குப் பயணம் செய்யமாட்டேன். யாரோ எழுதிய புத்தகத்தை ‘ஜனாதிபதி தாத்தா’ என்று பெயர் வைத்து மகளின் பெயரில் வெளியிட்டிருக்கமாட்டேன்.

இரவில் ஒன்றையும், காலையில் வேறொன்றையும் ஜனாதிபதி மைத்திரி பேசி வருகின்றார். அமெரிக்கா போன்ற நாடுகளில் அரச தலைவர், படைத்தளபதிகள் மனநல பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அதேபோல் இங்குள்ளவர்களுக்கும் செய்யவேண்டும். இரண்டு வாரங்கள் அங்கொடையில் சிகிச்சை பெற்றாலும் பரவாயில்லை. அதற்கு ஏற்றவகையில் சட்டத்தில்கூட திருத்தம் செய்யலாம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading