ரிஷாட் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை என அறிவிப்பு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க, போதுமான ஆதாரங்கள் இல்லை என பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் அறிவித்துள்ளது.
இதன்படி ,ரிஷாட் பதியுதீனின் கைது மற்றும் தடுப்புக்காவல் தொடர்பாக விசாரணை நடாத்தி, குறித்த விடயம் தொடர்பான தனது முடிவை பாராளுமன்ற ஒன்றியம் வெளியிட்டுள்ளது.
அதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக பதவிவகித்த காலப்பகுதியில் , உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுக்கு உதவியமை மற்றும் உடந்தையாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.
அந்நிலையில் , அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இத்துடன் , ரிஷாட் பதியுதீன் சார்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உடனடியாக பரிசீலிக்காத நிலையில், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக குறித்த ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.
06 மாதங்களுக்குப் பிறகு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்ட போதிலும், அவரை சந்தேக நபராக கருதுவதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்கான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த ஒன்றியும் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே இந்த விடயம் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால், ரிஷாட் பதியுதீனின் முறைப்பாடு நியாயமானது என தாம் கருத வேண்டியுள்ளதாக, பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் , உலகின் 179 தேசிய பாராளுமன்றங்கள் மற்றும் 13 பிராந்திய பாராளுமன்ற சபைகளின் அங்கத்துவத்துடன், பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியம் செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
