Local

11 இளைஞர்கள் கடத்தல்: கைதாகவிருந்த அட்மிரல் நாட்டை விட்டுத் தப்பியோட்டம்!

குற்றப் புலனாய்வுப் பிரிவினால் இன்று காலை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இன்று அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில், பிரதான சந்தேக நபரைத் தப்பிக்க அனுமதித்த குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவைக் கைதுசெய்ய கோட்டே நீதிவான் அனுமதி அளித்திருந்தார்.

இதற்கமைய, இன்று காலை அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையகத்துக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் திட்டமிட்டிருந்தனர்.

எனினும், அவர் இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகவில்லை.

அட்மிரல் விஜேகுணரத்ன இன்று அதிகாலை 3.30 மணியளவில் கட்டார் எயர்வேஸ் விமானம் மூலம் டோகாவுக்குப் பயணமாகி விட்டார் என்றும், அவரது இந்தப் பயணத் திட்டம் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குத் தெரியாது என்றும் கூறப்படுகின்றது.

இரகசியப் பணி ஒன்றுக்காகவே அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன வெளிநாடு சென்றுள்ளார் என்றும் சொல்லப்படுகின்றது.

மெக்சிகோவின் தேசிய தின நிகழ்வுகளில் அரசின் பிரதிநிதியாக பங்கேற்கவே அட்மிரல் விஜேகுணரத்ன அங்கு செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், விசாரணைக்கு சமுகமளிக்க குறிப்பிடப்பட்ட நேரத்துக்கு, சில மணி நேரம் முன்னதாகவே அட்மிரல் விஜேகுணரத்ன நாட்டை விட்டு வெளியேறியிருப்பது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading