Sports

45 வருட கால சாதனையை முறியடித்தார் அஸ்வின்!

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்றது. இந்திய அணி இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று சமநிலையில் இருக்கின்றன. இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு சாதனையை படைத்துள்ளார். 45 ஆண்டுகளாக இருந்த சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை தற்போது ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான 21 டெஸ்டில் அஸ்வின் 97 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை பகவத் சந்திரசேகர் பெயரில் இருந்தது. சந்திரசேகர் 1964 முதல் 1979 வரை இங்கிலாந்துக்கு எதிராக 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 95 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இப்போது அந்த சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். அதாவது 45 ஆண்டுகால சாதனையை அஸ்வின் முறியடித்துள்ளார். இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாளில் பென் டக்கெட்டை அவுட் செய்து அஸ்வின் இந்த சாதனையை படைத்தார்.

அஸ்வின் அடுத்த டெஸ்ட் போட்டியில் இன்னொரு சாதனையை படைக்க உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இப்போது வரை 499 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இன்னும் ஒரே ஒரு விக்கெட் எடுத்தால் அவர் 500 டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற இருக்கிறார்.

அதேபோல், 499வது விக்கெட்டுடன் டெஸ்ட் போட்டியை நிறைவு செய்வது என்பது சர்வதேச கிரிக்கெட்டில் இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் கிளென் மெக்ராத் 499 விக்கெட்டுகளுடன் டெஸ்ட் போட்டியை நிறைவு செய்து, அடுத்த போட்டியில் முதல் விக்கெட் எடுத்து அந்த சாதனையை படைத்தார். இப்போது அஸ்வினும் அதேபோல் சாதனை படைக்க இருக்கும் இரண்டாவது வீரராக இருக்கப்போகிறார்.

இந்த டெஸ்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இரண்டு இன்னிங்சிலும் ஆல் அவுட் ஆனது. இருப்பினும், இருவரும் தங்கள் ஒவ்வொரு இன்னிங்சிலும் 250 ரன்களுக்கு மேல் எடுத்தனர். இந்தியா முதல் இன்னிங்சில் 396 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 255 ரன்களும் எடுத்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 253 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 292 ரன்களும் எடுத்தது. இரு அணிகளும் தங்களின் இரு இன்னிங்சிலும் 250 ரன்களுக்கு மேல் குவித்து இருவரும் ஆல் அவுட் ஆனது இந்தியாவில் இதுவே முதல் முறை ஆகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading