Jobs

DIMO, ChildFund நிறுவனங்களுடன் இணைந்து இலங்கையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான உதவித் திட்டத்தை முன்னெடுக்கும் Tata Group

 

இலங்கையில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் அதனைத் தொடர்ந்தான வெள்ளப்பெருக்கு பேரழிவு தாக்கங்களுக்கு பதிலளிக்கும் விதமாக, ChildFund, DIMO நிறுவனங்களுடன் Tata Group இணைந்து, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஒரு பாரிய அளவிலான மனிதாபிமான திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கையிலிருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ உதவிக்கான கோரிக்கையை தொடர்ந்து, 2025 டிசம்பரில் கள நிலவரம் குறித்த மதிப்பீடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணப்பட்ட அவசர தேவைகளைக் கண்டறிந்து, பல்வேறு Tata நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த நிவாரணத் திட்டத்தை ஆரம்பித்தன.

இந்த முன்னெடுப்பின் ஒரு முக்கிய அங்கமாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு அத்தியாவசிய கல்விப் பொருட்களை வழங்கும் ‘Hope in a Backpack’ திட்டம், கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் Tata குழுமத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, விசேட விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, DIMO தலைவர் ரஞ்சித் பண்டிதகே, Tata Sons குழுமத்தின் பிரதம நிலைபேறான தன்மை அதிகாரி சாக்கோ தோமஸ், ChildFund நிறுவனத்தின் நாட்டுக்கான பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த முன்னெடுப்பு, வருங்கால சந்ததியினருக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கி உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்தும் ‘Lassana Hetak’ எனும் திட்டக் கருப்பொருளின் கீழ், DIMO நிறுவனத்தின் சமூக மற்றும் சமுதாயத் தூணின் ஒரு அங்கமாக அமைகின்றது.

Tata மற்றும் DIMO நிறுவனங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியால் இது மேலும் வலுவடைந்ததுடன், அவர்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு பொருட்களை பொதி செய்யவும், விநியோகிக்கவும், ஆதரவளிக்கவும் களத்தில் மும்முரமாக பணியாற்றி இந்தக் கூட்டு முயற்சியை மேலும் வலுப்படுத்தினர். இந்நிகழ்ச்சிகளின் போது, அழைக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பாடசாலை புத்தகப்பையை பெற்றுக் கொண்டனர்.

இந்தக் கூட்டாண்மை குறித்து DIMO நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பண்டிதகே தெரிவிக்கையில், “Tata Group மற்றும் ChildFund ஆகியவற்றுடன் இணைந்து இந்த அர்த்தமுள்ள திட்டத்தில் உள்ளூர் செயற்பாட்டு மற்றும் பொருட்கள் கையாளுகை (logistics) பங்காளராக பணியாற்றுவதில் DIMO நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. Tata உடனான எமது உறவு 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. நெறிமுறை சார்ந்த வணிக நடைமுறைகள், நம்பிக்கை மற்றும் நாம் சேவை வழங்கும் சமூகங்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் உள்ள பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் அடிப்படையில் இந்த உறவு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த விழுமியங்கள், பல ஆண்டுகளாக எமது கூட்டாண்மையை வடிவமைத்து, வணிக நடவடிக்கைக்கு அப்பால் மக்களின் வாழ்வில் அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்தும் முன்னெடுப்புகள் வரை விரிவடைந்துள்ளன. இலங்கை முழுவதும் உள்ள சமூகங்கள் மீண்டெழுவதற்கு ஆதரவளிப்பதோடு, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் நம்பிக்கையுடன் பாடசாலைக்கு திரும்ப உதவும் இந்த மனிதாபிமான முயற்சிக்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமை அடைகிறோம்.” என்றார்.

இது குறித்து, Tata Sons நிறுவனத்தின் பிரதம நிலைபேறான தன்மை அதிகாரி  சாக்கோ தோமஸ் (Chacko Thomas) கருத்துத் தெரிவிக்கையில்: “Tata நிறுவனத்தில், சமூகம் என்பது வணிகத்தில் ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, அவர்களே அதன் இருப்பிற்கான அடிப்படை நோக்கம் என நாம் நம்புகிறோம். இது எமது நிறுவுனர் ஜம்ஷெட்ஜி டாடா (Jamsetji Tata) அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தத்துவமாகும். இந்தக் கொள்கையின் வழிகாட்டலுடன், இலங்கை மக்கள், குறிப்பாக டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பதில் நாம் பெருமை கொள்கிறோம். இந்த முயற்சி, சமூகங்கள் நம்பிக்கையுடனும் புதிய எதிர்பார்ப்புடனும் முன்னேறிச் செல்ல பாரிய அளவில் உதவுமென  நாம் நம்புகிறோம்.” என்றார்.

மாவட்ட ரீதியிலான விநியோகத் திட்டமானது, கண்டியில் 101 பாடசாலைகளைச் சேர்ந்த 8,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், நுவரெலியாவில் 54 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள், பதுளையில் 77 பாடசாலைகளைச் சேர்ந்த 11,000 இற்கும் மேற்பட்ட மாணவர்கள், கேகாலை மாவட்டத்தில் வழங்கப்பட்ட அதிகளவான முக்கியமான உதவிகள் ஆகியவற்றின் மூலம் 27,000 மாணவர்கள் எனும் வெற்றிகரமான மைல்கல்லை எட்டியுள்ளது.

இந்த மனிதாபிமானத் திட்டமானது, கல்வியின் தொடர்ச்சியை உறுதி செய்வதிலும், பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதிலும், இலங்கையின் தற்போதைய மீட்சிக்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் Tata Group, ChildFund, DIMO ஆகியவற்றின் ஒரே அடிப்படையான அர்ப்பணிப்பை எடுத்துக் காட்டுகிறது.

 

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading