Lead NewsLocal

பிசுபிசுத்தது மஹிந்த அணியின் வியூகம்! – நிறைவேறியது ‘பட்ஜட்’

கூட்டமைப்பின் பேராதரவுடன்
மீண்டும் ரணில் அரசு வெற்றி!
இ.தொ.காவும் நேசக்கரம்!!

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 மேலதிக வாக்குகளால் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின்போது ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் முற்பகல் 10. 20 மணி முதல் ‘பட்ஜட்’டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

ஆளும் மற்றும் எதிரணி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்ட பின்னர் மாலை 6 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன்போது ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியும் அதன் பங்காளிக் கட்சிகளும் ஆதரவாக வாக்களித்ததன.

அதேவேளை, சிவசக்தி ஆனந்தன், எஸ்.வியாழேந்திரன், ஈ.சரவணபவன் தவிர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 14 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 11 பேர் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான மைத்திரி – மஹிந்த கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும், ஜே.வி.பியும் எதிராக வாக்களித்தன. இதன்படி 43 மேலதிக வாக்குகளால் ‘பட்ஜட்’ நிறைவேறியது.

பட்ஜட்டைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த அணி அறிவித்திருந்தாலும், அவர்களின் முயற்சி பிசுபிசுத்துள்ளது.

மஹிந்த அணியில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகம் தொண்டமான், முத்து சிவலிங்கம் ஆகியோர் ‘பட்ஜட்’டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேவேளை, மைத்திரி அணி உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

குழுநிலை விவாதம்

நாளை 13ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதம் (மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம்) நடைபெறவுள்ளது. இதற்கு 19 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading