World

பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்! உயிருடன் மீட்பு

தைவானில் வாழும் பெண்ணொருவரின் கண்ணில் இருந்து நான்கு தேனீக்கள் எடுக்கப்பட்டுள்ளன.

ஹீ என்ற அந்த 28 வயதான பெண் செடிகளை அகற்றிக் கொண்டிருந்தபோது, அவரது கண்ணில் இந்த தேனீக்கள் புகுந்துள்ளன.

நான்கு மில்லிமீட்டர் நீளமுள்ள தேனீக்களை அவற்றின் கால்களை பற்றி இழுத்து எடுத்தபோது அதிர்ச்சியடைந்ததாக  பூயின் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் ஹொங் ச்சி டிங்   தெரிவித்தார்.

மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பட்டுள்ள ஹீ, விரைவில் முழுமையாக குணமடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாலிக்டிடே என்று அறியப்படும் இந்த தேனீக்கள் வியர்வை மணத்தால் கவரப்படுகின்றன. வியர்வை உறைந்துள்ள மக்களை நோக்கி இவை வருவதுண்டு.

கண்ணீரில் இருக்கின்ற அதிக புரதத்தால் இவை கண்ணீரை குடிக்கின்றன என்று கனாஸ் என்டோமோலோஜிக்கல் சொசைட்டி மேற்கொண்ட ஆய்வு தெரிவிக்கிறது.

ஹீ என்கிற இந்த பெண்மணி அவரது உறவினரின் கல்லறைகளை சுற்றி வளர்ந்திருந்த களைகளை அகற்றி கொண்டிருக்கையில் இந்த தேனீக்கள் அவரது இடது கண்ணில் புகுந்துவிட்டன.

ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் சிங்மிங் கல்லறை சந்திப்பு பண்டிகையின் ஒரு பகுதியாக, தங்களின் அன்புரிக்குரியோரின் கல்லறைகளை சுத்தம் செய்கின்ற பணியை ஹீ மேற்கொண்டார்.

அப்போது பலமான காற்று வீசியபோது, கண்ணில் அழுக்கு விழுந்துவிட்டது என்று நினைத்து கொண்டதாக ஹீ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால். சில மணிநேரங்களுக்கு பின்னர், அவரது கண் வீங்கி, வலியும் அதிகரிக்கவே தைவானின் தென் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதாயிற்று.

“அவரால் கண்ணை முழுமையாக மூட முடியவில்லை. நுண்ணோக்கி மூலம் இடைவெளியின் உள்ளே பார்த்தபோது, பூச்சியின் கால்களைபோல கறுப்பாக இருந்த ஒன்றை பார்த்தேன்” என்கிறார் அந்த மருத்துவமனையின் கண் சிறப்பு மருத்துவ பேராசிரியர் ஹொங்.

“அந்த காலை பிடித்து ஒன்றை மெதுவாக வெளியே இழுத்து எடுத்தேன். பின்னர் இன்னொன்றை பார்த்தேன். பின்னர் இன்னொன்று. பிறகு கடைசியாக ஒன்று. அவை அனைத்தும் அப்போதும் உயிருடன் இருந்தன” என்று அவர் விளக்கினார்.

இந்த தேனீக்களின் படங்கள் தைவான் தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading