IMFவிடம் இருந்து விரைவில் இலங்கைக்கு இரண்டாம் தவணை கடன்!
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது தொடர்பாக உத்தியோகபூர்வ கடன் குழு இலங்கை அரசாங்கத்திற்கு பதிலளித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான விரிவான நிதியளிப்பு வசதி தொடர்பான கடன் சலுகைகளுக்காக பின்பற்றப்பட வேண்டிய முக்கிய அளவுருக்கள் தொடர்பில் இலங்கையுடன் கொள்கை ரீதியான உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக Official Creditor Committee – OCC குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தின் கீழ், நிலுவையில் உள்ள 5.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளது.
இந்த உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவில் பெரிஸ் கிளப்புடன் இந்தியா மற்றும் ஹங்கேரி ஆகியவை அடங்கும்.
உத்தியோகபூர்வ கடனாளிகள் குழு இந்தியா, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் இணைத் தலைவராக உள்ளது.
இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பது குறித்து இலங்கை அரசாங்கம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் கடந்த ஒருவருடகாலமாக கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.
அதன் பிரகாரம் முதல்கட்ட கடன் மறுசீரமைப்புக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்தது. இரண்டாம் கட்ட கலந்துரையாடல்கள் கடந்த சில மாதங்களாக இடம்பெற்று வந்த நிலையில், இன்று பெரிஸ் கிளப்புடன் இணைந்து பணியாற்றிய நாடுகள் இலங்கைக்கு உரிய பதிலை அளித்துள்ளன.
இரண்டாம் தவணை கடன் வசதி விரைவில் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
