LPL தொடர் – 421 உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் தேர்வு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்யும் லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரின் 6-வது கட்டத்திற்கான வீரர்களின் தேர்வில் 421 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கிரிக்கெட் நிறுவனம் இன்று (29) விடுத்துள்ள செய்திக்குறிப்பில், இதில் 179 உள்நாட்டு வீரர்களும் 242 வெளிநாட்டு வீரர்களும் உள்வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களின் தெரிவுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்நாட்டு வீரர்கள் தேசிய மட்டம், உள்ளூர் மட்டம் மற்றும் வளர்ந்து வரும் வீரர்கள் என பல பிரிவுகளின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களும் பிளாட்டினம் (Platinum), கோல்ட் (Gold), கிளாசிக் (Classic), வளர்ந்து வரும் வீரர்கள் (Emerging) மற்றும் அசோசியேட் ஸ்டார்ஸ் (Associate Stars) என பல பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு, அந்தந்த அணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
அவர்களில், உள்நாட்டு வீரர்களில் 17 பேர் பிளாட்டினம் பிரிவிலும், 34 பேர் கோல்ட் பிரிவிலும், 80 பேர் கிளாசிக் பிரிவிலும், எஞ்சிய 48 வீரர்கள் வளர்ந்து வரும் பிரிவிலும் பெயரிடப்பட்டுள்ளனர்.
அதேபோல், வெளிநாட்டு வீரர்களில் 31 பேர் பிளாட்டினம் பிரிவிலும், 64 பேர் கோல்ட் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 99 வீரர்கள் கிளாசிக் பிரிவிலும், 48 வீரர்கள் அசோசியேட் ஸ்டார்ஸ் பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு ஜூன் 1-ஆம் திகதி பி.ப. 1.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே, கிரிக்கெட் மாற்றுக்குழு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மற்றும் அனைத்து அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கலந்துகொள்ளவுள்ளனர்.
6-வது முறையாக நடைபெறும் லங்கா பிரீமியர் லீக் 2026 தொடர், எதிர்வரும் ஜூலை மாதம் 17-ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 8-ஆம் திகதி வரை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இம்முறை போட்டித் தொடருக்காக 650-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் அண்மையில் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
அதற்காக ஐசிசியின் (ICC) முழுநேர உறுப்புரிமை பெற்ற அனைத்து நாடுகளின் வீரர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளிலிருந்து வீரர்கள் பதிவு செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

You must be logged in to post a comment.