நேரடிப் பேச்சுக்கு மைத்திரி அழைப்பு; அடியோடு நிராகரித்தது தெரிவுக்குழு!
ஏப்ரல் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களுடன் நேரில் பேச்சு நடத்த வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கை அடியோடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி தரப்பில் இருந்து தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவரினூடாக அறியக் கிடைத்தது எனவும், பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தொடர்பிலும் இப்போது ஆராயப்படுவதால் அவரைச் சந்திப்பது தார்மீகமானதல்ல எனத் தீர்மானிக்கப்பட்டது எனவும் மேற்படி குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் ‘தமிழன்’ செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதி இவ்வாறு பேச்சுக்கு அழைத்திருக்கலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஏற்கனவே சபாநாயகர் இந்த விடயத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பதால் வேறு ஆட்களுடன் பேச்சு நடத்துவதில் அர்த்தமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று தெரிவுக்குழு விசாரணைகளை ஆரம்பிக்க முன்னர் ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை குறித்து விரிவாக பேசப்பட்டபோதும் பெரும்பாலான உறுப்பினர்கள் அதனை நிராகரித்துவிட்டனர் என அறியமுடிந்தது என ‘தமிழன்’ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

