Up Country

தேயிலை அழிந்தால் நாட்டின் பொருளாதாரமும் அழியும் – முரளிதரன் சுட்டிக்காட்டு!

பெருந்தோட்ட பயிர் அழிவுகண்டால் நாட்டின் பொருளாதாரம் அழிந்துவிடும் என  கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பெருந்தோட்ட தொழிலாளர்கள் எதிர்பார்க்கும் ஆயிரம் ரூபாய் சம்பள விடயத்தில் பல சிக்கல் நிலை உள்ளது எனவும் அவர் கூறினார்.

நாவலப்பிட்டியில் இன்று (05) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தனது உரையில் தெரிவித்ததாவது,

மக்களின் நலன்கருதி  பொதுவான பணிகளை முன்னெடுக்க கடந்த இரண்டாயிரமாம் ஆண்டில் அமைப்பு ஒன்றை ஆரம்பித்து பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இதுவரைக்காலமும் எத்தனையோ பொது அமைப்புகள் மலையக மக்களுக்காக சேவையாற்ற முன் வந்திருந்த போதிலும் அவை வழங்கும் உதவிகள் மக்களுக்கு நேரடியாக சென்றடைந்ததாக தெரியவில்லை.

இருப்பினும் மலையக பிரதேசங்களில் எமது பொதுப்பணிகளை முன்னெடுக்க சரியான அமைப்பு ஒன்று எமக்கு இருக்கவில்லை.

ஆகையினால் குருவி எனும் அமைப்பின் ஊடாக இப்போது மலையக மக்களுக்கும் எமது பொதுபணிகளை மக்களுக்கு நேரடியாக சென்றடைய நாம் முன்வந்துள்ளோம்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தி கொள்வதற்கு பல்வேறு  சிக்கல்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

எமது அமைப்பின் ஊடாக பல திட்டங்களை இம்மக்கள் சமூகத்திற்கு வழங்க திட்டங்களை வகுத்து வருகின்றோம்.

அதேவேளையில் அரசு பங்கேற்காத திட்டங்களை மக்களுக்கு எமது பொது அமைப்பின் ஊடாகவே நாம் செய்யவுள்ளோம்.

அதேபோன்று மருத்துவ காப்புறுதி சேவையையும் மலையக மக்களுக்காக உருவாக்க திட்டங்களை வகுத்து வருகின்றோம். இதன் மூலம் மருத்துவ பிரச்சனையில் கால்வாசியேனும் தீரும் .

இதுவரை 2000 மாணவர்களுக்கு கற்றல் உபகரனங்களை வழங்கி வைத்துள்ள நாம் மேலும் பத்தாயிரம் மாணவர்கள் இனங்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலத்தில் அவர்களுக்கும் இவ் வசதிகளை செய்துகொடுக்கவுள்ளோம்.

கஷ்ட பிரதேச தோட்டப்பகுதிகளில் நூலகங்கள், பாடசாலைகளில் தளபாட குறைப்பாடுகள் என சிறுசிறு குறைப்பாடுகளை பூர்த்திக்க நாம் தயாராகி வருகின்றோம்.

அதேநேரத்தில் இன்று மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமது வாழ்கை வருமானத்தில் பாரிய பின்னடைவை எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்று தமது உழைப்புக்கேற்ற ஊதியமாக ஆயிரம் ரூபாவை எதிர்பார்த்து பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஆனாலும் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு விடயத்தில் பல சிக்கல் நிலை காணப்படுகின்றமையை நாம் அறிந்துள்ளோம். ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியாது.

ஆனாலும் இன்றைய வாழ்க்கை முறைக்கு தொழிலாளர்களின் கஷ்டத்தை போக்கிகொள்ள ஆயிரம் ரூபாய் அவசியமாகும்.

தோட்டத் தொழிலாளர்கள், பெருந்தோட்ட முகாமைத்துவம், தேயிலை ஏற்றுமதியாளர்கள், தேயிலை உற்பத்தி செய்வோர்கள் என நான்கு பிரிவினரும் ஒன்றினைந்து ஒருமித்த முடிவுக்கு வரும் நேரத்தில்

சம்பள உயர்வுக்கான சாத்தியம் ஏற்பட்டும் வாய்ப்பு உள்ளதாகவும், தொழிலாளர்களுக்கு வருமானம் குறையும் பட்சத்தில் பெருந்தோட்டப்பயிருக்கு அழிவு ஏற்படக்கூடும். அவ்வாறு அழிவு ஏற்படும் போது நாட்டின் பொருளாதாரமும் அழியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading