ஐ.தே.கவில் தஞ்சமடைந்துள்ள சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி! பச்சைக்கொடி காட்டுவாரா மைத்திரி?
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலருக்கு விரைவில் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என அறியமுடிகின்றது.
அமைச்சரவை நியமனத்துக்கான பெயர் விபரம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
ஐ.தே.கவுக்கு ஆதரவளித்த சு.க. உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது என ஜனாதிபதி சிறிசேன ஆரம்பத்தில் திட்டவட்டமாக அறிவித்திருந்த நிலையில், தற்போது வழங்குவதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்அடிப்படையிலேயே ஜனாதிபதிக்கு பெயர்ப்பட்டியல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இதன்படி விஜித் விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசிலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் தேசிய அரசு அமையும் பட்சத்தில் அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரித்துக்கொள்ள முடியும்.
