திடீரெனத் தீப்பிடித்த பயணிகள் பஸ்; தவிர்க்கப்பட்டது பெரும் உயிர்ச்சேதம்!
தனியார் பயணிகள் பஸ் ஒன்று திடீரெனத் தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும், பயணிகள் உயிர்ச்சேதம் இன்றி தப்பியுள்ளனர்.
இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் அவிசாவளை, கிரிவந்தல பகுதியில் தீப்பிடித்துள்ளது.
இந்தச் சம்பவம் இன்று காலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பஸ் தீப் பிடித்து எரிந்த வேளை, பஸ்ஸினுள் சுமார் 50 இற்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர்.
இந்தநிலையில், பஸ் திடீரென தீப்பிடிப்பதை அவதானித்த பஸ்ஸின் சாரதியும் நடத்துநரும் அவசரமாக செயற்பட்டு அனைத்துப் பயணிகளையும் பஸ்ஸினுள் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளமையால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
ஆரம்பத்தில் பஸ்ஸின் இயந்திரப் பகுதியில் தீ பரவியுள்ளது எனவும், பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டை மீறியமையால் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த பகுதிக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்பகுதியில் மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவம் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



