Lead NewsLocal

கொள்ளுப்பிட்டியில் இறுதி நாட்களைக் கழித்த சஹ்ரான்! – பல இரகசியங்களை அம்பலப்படுத்தும் அவரின் மனைவி

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் காயமடைந்து அம்பாறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சஹ்ரானின் மனைவியான சாதியாவிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

சஹ்ரான் தற்கொலைத் தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் தன்னுடன் கொழும்பில் தங்கியிருந்தார் எனத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“கொள்ளுப்பிட்டியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்தோம். கடந்த 18ஆம் திகதி அதிக நேரத்தை எங்களுடன் செலவிட்டார். வழமைக்கு மாறாக மகளுடன் அதிக நேரம் விளையாடினார்.

இதன்போதுதான் ஜிஹாத் ஆகப் போவதாகத் தெரிவித்தார். என்னைப் பிறிதொரு இடத்தில் கொஞ்ச நாளைக்கு இருக்கச் சொன்னார்.

எனினும், அவரின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாரம்மலையில் உள்ள எனது வீட்டில் விடுமாறு கேட்டேன். அதற்கு அவர் உடன்படவில்லை.

பல தடவை அவரிடம் விவாகரத்துச் செய்யக் கூறியிருந்தேன். அவை கைகூடவில்லை. விவாகரத்து செய்ய மறுத்து விட்டார்.

தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட அன்று நாங்கள் சாய்ந்தமருதில் இருந்தோம். எங்கள் கும்பல் தற்கொலை செய்து கொண்டு விட்டதால் நாங்கள் வெள்ளை நிற ஆடைகளை அணிவோம் என்று ரிஸ்வானின் மனைவி என்னிடம் கூறினார்.

சஹ்ரான் இப்படி செய்தமை குறித்து கவலையடைந்த அவரின் தாயார் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என எங்களைத் தேற்றினார்.

புர்காவை அணிவதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால், எங்கு சென்றாலும் புர்கா அணிந்து செல்லுமாறு சஹ்ரான் அச்சுறுத்துவார். நான் எங்கிருந்தாலும் என்னுடன் தொலைபேசியில் பேசுவார். புர்காவை அணிந்து செல்வது பாதுகாப்புக்கு உகந்தது என அடிக்கடி கூறுவார்.

என்னுடன் இருந்த சாரா மற்றும் பெரோசாவின் கணவன்மார்கள் தற்கொலைத் தாக்குதலில் இறந்தனர். அப்படி அவர்கள் இறந்தது பெருமையாக இருப்பதாக அவர்கள் என்னிடம் தெரிவித்தனர்” – என்று விசாரணை அதிகாரிகளிடம் சாதியா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading