FeaturesLocal

ஐ.நா. ஆணையரின் அறிக்கையில் ‘தமிழ் மக்கள்’, ‘வடக்குக் கிழக்கு’ என்ற வார்த்தைப் பிரயோகங்கள் தவிர்ப்பு!

ஐ.நா. மனித உரிமைச் சபை ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் தமிழ் மக்கள் என்றோ, வடக்கு – கிழக்கு மாகாணம் என்றோ எந்தவொரு வார்த்தைப் பிரயோகங்களும் பயன்படுத்தப்படவில்லை. மாறாக இலங்கை மக்கள் என்றே ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்கள – தமிழ் இனப்பிரச்சினையாகக் காண்பித்தால் போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக தமிழ் இன அழிப்பு என்ற அடிப்படையிலான விசாரணையாக மாறிவிடலாம் என்ற நோக்கில் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கை மக்கள் என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென ஜெனீவாவில் உள்ள தமிழ்ப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

ஆணையாளரின் அறிக்கையில் தமிழ் மக்கள் என்று கூறப்படாமை தொடர்பாக ஜெனீவாவுக்குச் சென்று முகாம் அமைத்துச் செயற்படும் தமிழ்ப் பிரதநிதிகள் எவருமே சுட்டிக்காட்டவில்லை.

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்ளும் தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பாக எதுவுமே பேசவில்லை.

மாறாக ஆணையாளரின் அறிக்கையின் பிரகாரம் இலங்கை அரசாங்கத்துக்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமைக்கு, கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆணையாளரின் அறிக்கையிலேயே தமிழ் மக்கள், வடக்கு கிழக்கு என்ற சொற் பிரயோகங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ள நிலையில் ஜெனீவா மனித உரிமைச் சபையிடம் இருந்து தமிழ் மக்கள் நீதியை எதிர்பார்க்க முடியாதென தமிழ்ப் பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

இலங்கையில் தமிழினப்படுகொலை நடந்தது என்பதை மறைத்து போர்க்குற்றம், மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து விசாரணைகளை நடத்துவதன் மூலம்,

சிங்கள – தமிழ் பிரச்சினையை வெறுமனே மனித உரிமைப் பிரச்சனையாகக் காண்பிப்பதே மனித உரிமைச் சபையின் நோக்கமா என்ற கேள்விகள் கூட எழாமலில்லை.

முப்பது ஆண்டுகால அஹிம்சைப் போராட்டம் மேலும் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டம் என்று சுமார் எழுபது ஆண்டுகளுக்கும் மேலான தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை வெறுமனே மனித உரிமைப் பிரச்சினையாகவும்,

இலங்கை மக்களின் பிரச்சினையாகவும் எடுத்துக் காட்டுவதற்காகவா ஜெனீவா மனித உரிமைச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இதேவேளை, போர்க்குற்ற விசாரணையை நடத்த சர்வதேச நீதிபதிகளை உள்வாங்கும் வகையில் கலப்புமுறைப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும், ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும் என்றும் ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைச் சபையின் கிளைக் காரியாலயம் ஒன்று கொழும்பில் அமைக்கப்பட வேண்டுமென்றும் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

மனித உரிமைச் சபையின் அமர்வு இந்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகள் மனித உரிமைச் சபையின் அமர்வில் சமர்ப்பித்துள்ளன.

பிரேரணை குறித்து கடந்த இரண்டு நாட்களாக விவாதம் இடம்பெற்றது. இதன்போது இலங்கை குறித்த தனது கருத்தை வெளியிட்ட ஆணையாளர் மிச்செல் பச்சலெட் அரசாங்கத்தின் மீது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

ஆனாலும் இலங்கை சார்பான அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திலக் மாரப்பன ஆணையாளரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஏற்க முடியாதெனக் கூறியுள்ளார்.

குறிப்பாக சர்வதேச நீதிபதிகள் அடங்கிய கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்கி அதனடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கை அரசியல் யாப்பில் இல்லையென அமைச்சர் திலக் மாரப்பன கூறியுள்ளார்.

விதப்புரைகளின் பிரகாரம், கலப்புப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதானால் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கு இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை உறுப்பினர்களின் வாக்குகள் பெறப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார்.

ஆனாலும் அமர்வில் கலந்துகொண்ட பிரித்தானியா, கனடா போன்ற நாடுகள் இலங்கை அரசாங்கம் மனித உரிமைச் சபையின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

சிரேஷ்ட ஊடகவியலாளர் – அ.நிக்ஸன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading