Local

இன்று மாலைக்குள் பிரதமராகிறார் ரணில்! – சபையில் மங்கள தகவல்

நாட்டில் வெற்றிடமாகவுள்ள பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை இன்று மாலைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர சபையில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்குமாறுகோரி – அவருக்கு நம்பிக்கை தெரிவிக்கும் பிரேரணையை ஐ.தே.கவின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாஸ சமர்ப்பித்தார்.

அப்பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மங்கள சமரவீர எம்.பி. மேற்படி கோரிக்கையை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நல்லாட்சி என்ற கோட்பாட்டிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி விலகிச் சென்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியிருந்தார். விலகிச் சென்றது யார் என்பதை அவரது மனச்சாட்சியிடமே கேட்டுப் பார்க்கவேண்டும். நல்லாட்சி என்ற கோட்பாட்டையே மேற்குலக நாடுகள் ஆதரித்தன. உதவிகளை வழங்கின. மாறாக மைத்திரி என்ற தனிநபருக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

அதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு நியமிக்கப்படவேண்டும். அவர் மீது நாம் நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றோம். நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், இன்று மாலைக்குள் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு நீங்கள் (சபாநாயகர்) ஜனாதிபதியிடம் கோர வேண்டும்.

புதிய ஆட்சி அமைந்ததும், இரண்டு மாதங்களை இலக்குவைத்து இடைக்கால கணக்கறிக்கையொன்றை சமர்ப்பிக்கலாம். அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டுக்கான பட்ஜட்டை அடுத்தாண்டு முற்பகுதியில் முன்வைக்கலாம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading