யார் இந்த நாமல் குமார்? உளவாளியா, சூத்திரதாரியா?
நாட்டின் அரசியல் சதித்திட்டத்திற்கு நாமல் குமார என்பவர் பயன்படுத்தப்பட்டுள்ளாரென ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
” நாமல் குமார என்பவர் பொலிஸாருக்கு உளவு தகவல்களை வழங்கியவர். இதற்கு முன்னர் அவன்ட் கார்ட் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளார். அவர் வெளியிட்ட குரல் பதிவுகளில் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டமை தொடர்பாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
இன்று தாமரை மொட்டு சின்னத்தில் நாமல் குமார போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாட்டின் அரசியல் சூழ்ச்சிக்கு நாமல் குமார பயன்படுத்தப்பட்டுள்ளார் என்பது தெளிவாக தெரிகின்றது.
ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முதலில் நாமல் குமாரவே தகவல் வெளியிட்டார். ஊழல் எதிர்ப்பு படையணியின் பிரதானியாக செயற்படும் இவர் வெளியிட்ட தகவல், பின்னர் நல்லாட்சியை பிளவுபடுத்தி ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணமாக அமைந்துவிட்டது” என்றும் கூறினார்.
