Technology

டைனோசர்கள் இனம் அழிந்தது எப்படி? வெளியானது ‘திகில்’ தகவல்!

டைனோசர்கள் இனம் ஏன் அழிந்தது எனப் பல்வேறு ஆராய்ச்சிகள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் சுவாரஸ்யமான ஒரு விஷயத்தைச் சொல்கிறது இந்தப் புதிய ஆய்வு.

ஸ் ஏஜ், ஜூராசிக் பார்க், டைனோசர் ஐலேண்ட், டைனோசர்… இப்படி உலகில் என்றோ ஒருநாள் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட கற்பனைப் படங்களைப் பார்த்திருக்கிறோம்.

அந்த டைனோசர் உள்ளிட்ட விலங்குகளின் எலும்புகளை அருங்காட்சியகங்களில் பார்த்திருப்போம்.

அதை வைத்து இவ்வளவு பெரிதாக இருந்திருக்கும். இப்படி வாழ்ந்திருக்கும் என்று எல்லாம் படித்திருப்போம்.

டைனோசர் முட்டை என்று கூட சிலவற்றை அருங்காட்சியகத்தில் வைத்திருப்பர்.

இப்படி வாழ்ந்த மிருகம் எப்படி அழிந்தது என்று பலதரப்பட்ட வகையில் ஆய்வுகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

நாளுக்கு நாள் வரும் ஆய்வுகளின் முடிவுகள் முந்தையதை விழுங்கியபடியே இருக்கின்றது.

அதேபோல் இப்போதும் ஒரு முடிவு வந்துள்ளது. அது நம்மை மலையளவு ஆச்சர்யப்படுத்தும். இல்ல அலை அளவு; பேரலை அளவு. ஆம். மொத்த டைனோசர் இனமும் அழிய சுனாமி பேரலைதான் காரணமாம்.

இதற்கு மேலும் ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. அதாவது, இந்த சுனாமி வந்ததற்குக் காரணமே ஒரு விண்கல் பூமியின் மீது மோதியதால்தானாம். அதனால் ஏற்பட்ட அதிர்வின் பலனாகத்தான் சுனாமி வந்ததாம்.

கடந்த ஜனவரி 6ஆம் திகதி  மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் பூமி மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆய்வாளர் மோலி ரென்ஞ் ஓர்  ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளவைதான் மேலே நாம் பார்த்த விஷயங்கள்.

காலமாற்றத்தில் உணவுச்சங்கிலி உடைந்துபோய் உணவின்றி டைனோசர் செத்தது என்று இருந்த வரலாற்று முடிவுகளைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்து அதன் காரணங்களை ஆராயத் தொடங்கிய மோலி மற்றும் அவரது நண்பர்கள் இந்த சுனாமி குறித்து மேலும் ஆராயத் தொடங்கினர்.

எவ்வளவு பெரிதாக அது வந்திருக்கும், எந்தளவு அது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றெல்லாம் ஆராயத்  தொடங்கும்போது இதற்காக அவர்களுக்கு நிறைய செயல்முறை சோதனைகளும் செய்யவேண்டியிருந்தன.

அதற்காக ரஹோடே தீவின் பிரவுன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பிராண்டன் ஜோன்சனைச் சந்தித்தனர். 10 நிமிட சோதனைக்கான மாதிரியின் வரைமுறை இதுதான்.

முதலில் பூமியில் விண்கல் வீழ்ந்த இடத்தில் ஒரு பெரும்பள்ளம் உருவாகும். அந்தப் பள்ளம் நிறைவதற்காக மற்ற பகுதியில் உள்ள நீர் ஓடிவரும்.

தனால் ஏற்பட்ட சலசலப்பால் கொலாப்ஸ் வேவ்ஸ் எனப்படும் தகர்வலைகள் உண்டாகும். அந்த அதிர்வுகளால் ஏற்படும் மாற்றங்கள்தான் அந்த விலங்குகளைப் பாதித்திருக்கும். இந்த முடிவுக்குத்தான் ஆய்வாளர்கள் வந்துள்ளனர்.

அதற்கு அடுத்த நிலைக்கு ஆய்வுகள் நகரும்பொழுது, விண்கல் குறிப்பாக அந்த  இடத்தை மட்டுமல்லாது பூமிப்பந்து முழுக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் அதிர்வுகளால் கடல் பரப்பு மொத்தமும் தன் வேலையைச் செய்துள்ளது என்று உணர்ந்துள்ளனர். இந்த அதிர்வுகளால் டைனோசர்கள் மட்டுமன்றி, அந்தச் சமயம் வாழ்ந்த பிற உயிரினங்களும் அழிந்துள்ளன.

இதை இன்னும் துல்லியமாகக் கணிக்கின்றனர் விஞ்ஞானிகள். அதன் விவரம் கீழே.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு…

9 மைல், அதாவது 14 கி.மீ அளவுள்ளது சிக்ஸ்க்குலப் என்ற விண்கல். அது மெக்ஸிகோ வளைகுடா பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 89 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து பூமி மேல் மோதியது.

இதனால் மெக்சிகோ வளைகுடாவில் 20 முதல்100 மீட்டர் உயரத்துக்கு அலைகள் அடிக்கத் தொடங்கியுள்ளன. 24 மணி நேரத்தில் அதன் அதிர்வு அட்லான்டிக், மத்திய அமெரிக்க கடல்வழிப் (இப்போது இல்லை) பகுதியை அடைந்துள்ளது.

அதைத் தொடர்ந்து தெற்கு பசிபிக், வட அட்லான்டிக் பகுதிகளில் அதிகபட்சம் 46 அடி அதாவது, 14 மீட்டர் வரை அலைகள் உயர்ந்துள்ளன.

இந்த உரசல்களால் ஏற்பட்ட நிலஅதிர்வு நிலத்தைச் சூடாக்கி, சூடான பாறைகளையும் தூசையும் கிளப்பிவிட்டது. அந்த வெப்பத்துடன் காட்டுத் தீ சேர்ந்து உயிரினங்களை வாட்டத் தொடங்கியது.

அந்த வெப்பம் புல் தொடங்கி எல்லா உயிர்களையும் அழித்துள்ளது. அதன் படிமங்கள் எல்லாம் கரையோரங்களில் படிந்துள்ளன. அதுதான் இன்றைக்கு நமக்குக் கிடைக்கிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் 1980-ல் அகழ்வாராய்ச்சியாளர்கள் இரிடியம் இருப்பைக் கண்டறிந்துள்ளனர். இரிடியம் என்பது பூமியில் அரிதான ஒரு தனிமம்.

அது விண்வெளியில்தான் அதிகம் உள்ளது. எனவே விண்கல் மோதியதால் படிந்த தனிமம் என்பது ஓரளவுக்கு உறுதியானது என்கிறார்கள்.

அதற்கு சில ஆண்டுகள் கழித்து மெக்ஸிகோ யூகேடன் தீபகற்பப் பகுதியில் சிக்ஸ்க்குலப் விண்கல்லால் ஏற்பட்ட பள்ளத்தைக் கண்டறிந்தனர்.

115 மைல் அகலம் கொண்ட அதன் நடுவில் 6 இன்ச் அளவுக்குத் துளையிட்டு ஆய்வு செய்தனர்.

அது, ஒரு பாறை திடீரென்று அதிக வெப்பத்தால் உருகி ஓடினால் உருவாகும் பொருள்களால் ஆனதாக இருந்தது. இதன் மூலம் விண்கல் தாக்கியதும் உறுதிப்படுத்தப்பட்டது.

இப்படித்தான் அந்த விண்கல், பயங்கர சுனாமியை உருவாக்கி டைனோசர்களைக் கொண்டுவிட்டது என்கின்றனர் மோலியும், மற்ற ஆய்வாளர்களும்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading