அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்று ரோஹித் சர்மா சாதனை!

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ரோஹித் சர்மா இதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றையும் எட்டியுள்ளார்.
இந்திய அணியின் இந்த வெற்றியில் ரோஹித் சர்மா, ஷர்துல் தாகூர் மற்றும் ஜஸ்ப்ரிட் பும்ராஹ்வின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. இதில் பும்ராஹ் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டார், ரோஹித் சர்மா இரண்டு இன்னிங்ஸிலும் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். ஆனால் ஷர்துல் தாகூரோ இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே யாரும் எதிர்பாராத ஆட்டத்தை வெளிப்படுத்தி மாஸ் காட்டினார். இதனால் ஷர்துல் தாகூருக்கே ஆட்டநாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த காரணத்தினால் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டதில் பல்வேறு விமர்ச்சனங்கள் இருந்தாலும், இந்த ஆட்டநாயகன் விருது மூலம் ரோஹித் சர்மா புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
நான்காவது போட்டியில் ரோஹித் சர்மா வென்ற ஆட்டநாயகன் விருது அவருக்கு 35வது விருதாகும். இதன் மூலம் அதிக முறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் வரிசையில் யுவராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளி நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
அதிகமுறை ஆட்டநாயகன் விருது வென்ற இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் (76 முறை) முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் விராட் கோலியும் (57) மூன்றாவது இடத்தில் சவுரவ் கங்குலியும் (37) உள்ளனர்.
