ஆந்திராவில் பரவும் மர்ம நோயால் பரபரப்பு!

ஆந்திர மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஏலூரு நகரில் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வாந்தி, மயக்கம், காய்ச்சல், வலிப்பு என பாதிப்பு ஏற்பட்டு முதல் 2 நாட்களில் 530 பேர் ஏலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 370 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மேலும் 80 பேர் இந்த மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோய் தாக்கம் ஏற்பட்ட 20 நோயாளிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இவர்கள் குண்டூர், விஜயவாடா அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் ஏலூரு வந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
ஏலூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் தொட்டிகள் சுத்தப்படுத்தப்பட்டன. இவற்றில் தண்ணீர் மாதிரிகளும் அப்பகுதிகளில் வினியோகிக்கப்படும் பாலின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பரிசோதனைகளில், தண்ணீர் மற்றும் பாலில் ஈயம் போன்ற ரசாயனம் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், கலப்படம் எப்படி நடந்தது என்பது குறித்து மருத்துவக் குழுவினரும் அதிகாரிகளும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இது தொற்று வியாதி இல்லை என்பதால் மக்கள் அச்சம் அடையத் தேவையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
