இந்திய வான்வௌியில் பாகிஸ்தான் உதவி விமானங்கள் பறக்க தடையில்லை!
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் பாகிஸ்தான் உதவி விமானத்திற்கு, இந்திய வான்வெளியைப் பயன்படுத்த புது டெல்லி அனுமதி மறுத்ததாக பாகிஸ்தான் ஊடகங்களில் பரவும் செய்திகள் அடிப்படையற்றவை என இந்தியா தெரிவித்துள்ளது.
இலங்கைக்குச் செல்லும் பாகிஸ்தான் நிவாரண விமானத்திற்கு இந்தியா விரைவாக அனுமதி வழங்கியதாக இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய வான்வெளியில் பறக்க அனுமதி கோரும் விண்ணப்பம் பாகிஸ்தானால் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது.
இலங்கைக்கு மனிதாபிமான உதவி வழங்குவதே கோரிக்கையின் நோக்கம் என்பதால், இந்தியா இந்த கோரிக்கையை துரித கதியில் செயல்படுத்தியதாகவும் அந்த அறிக்கையில் கூறப்படுகின்றது.
இந்த அனுமதி, நான்கு மணி நேரத்திற்கும் குறைவான காலத்திற்குள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் இந்திய விமான நிறுவனங்கள் அதன் வான்வெளியைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ள போதிலும், இந்த அனுமதி ஒரு முற்றிலும் மனிதாபிமான நடவடிக்கை என்று அதிகாரிகள் வலியுறுத்தினர்.
உதவி விமானங்களுக்கு இந்தியா தமது வான்வெளியை வழங்க மறுத்துவிட்டதாக சில பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்தே இந்தியா அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You must be logged in to post a comment.