Local

இன்று முதல் வீதி ஒழுங்கை மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை!

பஸ் முதன்மையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வீதி போக்குவரத்து ஒழுங்குகள் மேலும் செயற்படுத்தப்படுவதுடன், அதனை மீறும் சாரதிகளுக்கு எதிராக இன்று திங்கட்கிழமை முதல் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், இதன்போது அபராதம் அறவிடாது, எதிர்வரும் ஒருவாரம் வரை தெளிவுப்படுத்தல்களை மாத்திரமே செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

வீதி ஒழுங்கு முறையை மீறும் சாரதிகள் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் , காணொளி பதிவுகள் , ட்ரோன் கெமராக்கள் மூலம் எடுக்கப்படும் காணொளிகள் ஊடாகவும் விசாரணைகளை நடத்துவதுடன், குற்றம் இடம்பெற்ற இடத்தில் சேவையில் ஈடுபட்டிருக்கும் பொலிஸ் அதிகாரியிடமும் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படும்.

வீதி போக்குவரத்து ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன், பல விமர்சனங்கள் மற்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவைத் தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம்.

அதற்கமைய சில மாற்றங்களையும் செய்துள்ளோம். மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள வீதி ஒன்றில் முதல் பிரிவில் பஸ் , மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கும், ஏனைய பகுதிகளில் வேறு எந்த வாகனமும் பயணிக்கமுடியும் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் , இதன்போது மேலும் வாகன நெரிசல் அதிகரிப்பதாக தெரியவந்துள்ளது. அதனால், வீதியின் முதலாம் பிரிவு மாத்திரமின்றி இரண்டாவது பிரிவிலும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பஸ்களை முதன்மையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வீதி ஒழுங்கு விதிகளே இவ்வாறு செயற்படுத்தப்பட்டு வருவதுடன், இதற்கு அனைவரும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும். இதேவேளை வீதி போக்குவரத்து விதிகள் நடைமுறையில் உள்ள ஏனைய வீதிகளிலும் அதனை உரிய முறையில் பயன்படுத்துமாறும் சாரதிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading