இலங்கையின் பிரபல தொழிலதிபர் சூப்பர் மார்க்கெட் துறையில் நுழைகிறார் !!
இலங்கையின் மிகப்பெரிய பன்முகத் தொழில்துறை நிறுவனமான ஹேலீஸ் PLC (Hayleys), பாரிய அளவிலான சூப்பர் மார்க்கெட் துறையில் நுழைவதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது. இது, 148 ஆண்டுகள் நீண்ட ஹேலீஸின் வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை தொடங்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்த முயற்சி மூலம், உயர்தரமான பொருட்கள், நம்பகத்தன்மை மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவையை இலங்கை மக்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருவதே ஹேலீஸின் நோக்கம். இதன்மூலம் நவீன சில்லறை வணிக அனுபவம் மறுவரையறை செய்யப்படும் என்று குழுமம் தெரிவித்துள்ளது.
ஹேலீஸ் குழுமம், தன்னுடைய விரிந்த தொழில்துறை வலையமைப்பு, வலுவான பிராண்ட் நம்பிக்கை, தூரநோக்குப் பார்வையுடைய தலைமைத்துவம் மற்றும் நிலைத்த தொழில்முறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, நாடு முழுவதும் மதிப்பை மையமாகக் கொண்ட சில்லறை வணிக வலையமைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளது.
முதல் கட்டமாக, முக்கிய நகர்ப்புற மற்றும் புறநகர் பகுதிகளில் 100 சூப்பர் மார்க்கெட்டுகள் திறக்கப்படவுள்ளன. இதன் மூலம் குழுமத்தின் வருமானம் மேலும் விரிவடைய, நீண்டகால நிதி நிலைத்தன்மை உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹேலீஸின் தம்மிக்க பெரேரா அண்மைக்காலமாக இலங்கையின் வர்த்தகத் துறையில் பல்வேறு அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றார்.
அண்மையில் அவர் நுகர்வோர் பொருட்கள் மற்றும் அரிசி ஆலை நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்ற ஹரிச்சந்திர மில்ஸ் PLC நிறுவனத்தின் 40% பங்குகளை கைப்பற்றினார்.கடந்த செப்டம்பரில், அவரது Vallibel One PLC மற்றும் LB Finance PLC ஆகிய நிறுவனங்கள், Associated Motor Finance Company PLC நிறுவனத்தில் பெரும்பங்குகளை சுவீகரிக்கப் போவதாக அறிவித்திருந்தன.
இந்நிலையில், அவரது இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

You must be logged in to post a comment.